பெரியார் சிலைக்கு காவி சாயம்... அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
கோவை: கோவையில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசப்பட்ட நிகழ்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், கனிமொழி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
பெரியார் சிலை அவமரியாதை.... சமூக அமைதி சீர்குலைய யார் காரணம்... டிடிவி தினகரன்!!
மு.க.ஸ்டாலின் ட்வீட்
''என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!''
தினகரன் கண்டனம்
கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம் சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
கனிமொழி வலியுறுத்தல்
தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ஜெயக்குமார்
இதனிடையே பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பல நிகழ்வுகள் அரங்கேறிவருவது குறிப்பிடத்தக்கது.