சூடுபிடித்த கொங்கு ஆபரேஷன்! "அவர்" இல்லையாம்.. திமுக ஸ்கெட்ச் போட்ட அந்த 3 பேர் யார்? அதிரும் அதிமுக
கோயம்புத்தூர்: அதிமுகவில் இருந்து திமுகவில் இணைய போகும் அந்த 3 எம்எல்ஏக்கள் யார் என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள்தான் அணி மாற போகிறார்கள் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மனதில் வைத்தே திமுக முக்கியமான ஆபரேஷன் ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கொங்கு மண்டலத்திற்கு 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றார். கோவையில் நடந்த திமுக விழாவில் மாற்று கட்சியினர் 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் இப்படி மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆனார்கள். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளை இந்த சம்பவம் அதிர வைத்து உள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக வளர்ந்து வரும் அதிமுக, பாஜகவை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில்தான் அதிமுகவில் இருந்து 3 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை மாவட்ட திமுக 5-ல் இருந்து 3ஆக குறைப்பு! 2 நிர்வாகிகளுக்கு கல்தா! செந்தில்பாலாஜியின் ஹிட் லிஸ்ட்
பரபரப்பு
கொங்கு மண்டலத்தில் உள்ள 3 எம்எல்ஏக்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க போவதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வட்டாரத்தில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்பி செந்தில் குமார் கூட இது தொடர்பாக இரட்டை இலை எமோஜி வைத்து குறிப்பாக ட்விட் ஒன்றை போட்டு இருந்தார். அதன்படி 3 எம்எல்ஏக்கள் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் கோவையை சேர்ந்த 10 அதிமுக எம்எல்ஏக்களில் 3 பேர் முதல்வர் ஸ்டாலினை பார்த்து திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்பட்டது.
நடக்கவில்லை
ஆனால் இந்த தகவல் கசிந்து கிட்டத்தட்ட 2 வாரத்திற்கும் மேலாகிவிட்டது. அப்படியும் கூட அதிமுக தரப்பில் இருந்து எம்எல்ஏக்கள் யாரும் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை. அதோடு எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் சென்ற போது கூட கொங்கு மண்டல எம்எல்ஏக்கள் எல்லோரும் அவருடன் இருந்தனர். யாரும் ஆப்சென்ட் ஆகவில்லை. அப்படி இருக்கும் போது அதிமுகவில் யார்தான் அணி மாற போவது என்ற கேள்வி எழுந்தது. உண்மையில் கொங்கு மண்டல எம்எல்ஏக்கள் 3 பேர் திமுக பக்கம் செல்வார்களா? அதற்கு வாய்ப்பு இருக்கா என்று சந்தேகம் எழுந்தது.
வேலுமணி
இந்த நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் அணி மாறாமல் தடுப்பதற்காக வேலுமணி காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்ற மண்டலத்தில் எம்எல்ஏக்கள் அணி மாறினால் பரவாயில்லை.. ஆனால் கொங்கு மண்டலத்தில் யாரும் அணி மாறிவிட கூடாது என்று வேலுமணி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். இதற்கு எதிராக செந்தில் பாலாஜியும் தீவிரமாக எம்எல்ஏக்களை இழுக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காகவே திமுக முக்கியமான கொங்கு ஆபரேஷன் ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரெய்டு
இந்த நேரத்தில் வேலுமணியை முடக்கும் விதமாக அவர் வீட்டில் 3வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 5 மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி பல்புகள் ஆக மாற்றியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது. சந்தை விலையை விட அதிக விலைக்கு இவர் பல்புகளை வாங்கியதாக புகார் வைக்கப்பட்டு, அது தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுக்கும் திமுகவின் கொங்கு ஆபரேஷனுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
அவர் இல்லை?
இது போக சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவத்துறை சிறப்பாக நடத்துகிறார் என்று சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கந்தசாமி தெரிவித்துள்ளார். ஜெயலிலதா, கருணாநிதி போல அவர் சிறப்பாக செயல்படுகிறார், என்று சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கந்தசாமி தெரிவித்துள்ளார். திடீரென இவர் இப்படி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசிய சம்பவம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே இவர்தான் கட்சி மாற போகிறாரோ என்ற விவாதம் எழுந்தது. ஆனால் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், அது அரசு நிகழ்வு என்பதால் முதல்வரை கந்தசாமி பாராட்டினார். மற்றபடி அவர் கட்சி மாறும் திட்டத்தில் எல்லாம் இல்லை என்கிறார்கள். திமுக தூக்க போவது இவரை இல்லை.. அது வேறு 3 எம்எல்ஏக்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.