திருகோணமலை கடற்படை தளத்திற்கு மகிந்த ராஜபக்சே மாற்றப்பட்டது ஏன்? பாதுகாப்பு துறை பரபர விளக்கம்
கொழும்பு: ‛‛பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே திரிகோணமலை பாதுகாப்பு படை தளத்தில் பாதுகாப்பாக உள்ளார். அவர் முன்னாள் அதிபர் என்பதால் உரிய முறையில் பாதுகாப்பு வழங்கப்படும்'' என இலங்கையின் பாதுகாப்பு துறை செயலாளர் கமலர் குணரத்னே கூறியுள்ளார்
இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு அரசின் தவறான கொள்கை முடிவுகள் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அதிபர், பிரதமர் பதவியில் இருக்கும் கோத்தபய, மகிந்த ராஜபக்சேக்கள் பதவிகளை ராஜினமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகி உள்ளார். இதற்கிடையே ராஜபக்சே ஆதரவாளர்களால் ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கலவரமாக மாறியது. ராஜபக்சேக்களின் பாரம்பரிய வீடு தீயிட்டு எரிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந்தது. இதில் 9 பேர் இறந்த நிலையில் 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிரதமர் பதவியில் இருந்து விலகியதால், அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். ராஜபக்சே வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின. ஆனால், மகிந்த ராஜபக்சே தரப்பில் இந்த தகவல் திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டது ஏன்? என்பதற்கு இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக செயலர் கமல் குணரத்னே விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் " இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பாதுகாப்பிற்காக திரிகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். மகிந்தா ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லம் தாக்கப்பட்டதையடுத்து கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றோம். நிலமை சீரான பிறகு மகிந்த ராஜபக்சே விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்லப்படுவார். மேலும் முன்னாள் அதிபர் என்ற முறையில் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கு அவர் தகுதியானவர்'' என்றார்.
இங்கு மகிந்த ராஜபக்சே, மனைவி ஷிரந்தி,து இளைய மகன் ரோஹிதா குடும்பத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் நேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
ராஜபக்சே வீட்டிற்கு தீயா! இரக்கமே காட்டாதீங்க.. பொங்கி எழுந்த சு.சாமி.. என்ன சொன்னார் தெரியுமா?