செம எதிர்பார்ப்பு! வந்துவிட்டது 5ஜி சேவை! இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா! கட்டணம் அதிகமாக இருக்குமா
டெல்லி: இந்தியாவில் பிரதமர் மோடி 5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்க உள்ள நிலையில், இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மொபைல் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் மொபைல் தொழில்நுட்பத்திற்கு முக்கிய பங்கு உள்ளது.
டிக்கெட் முன்பதிவு முதல் ஷாப்பிங் வரை முன்பு நேரில் செல்ல வேண்டிய விஷயங்கள் அனைத்தும் இப்போது மொபைலில் கிடைப்பதால் இது பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவியது.
வேகமா போனது தப்புத்தான்.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. கைதுக்கு பின் டிடிஎப் வாசன் மனமாற்றம்
டெலிகாம் துறை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி சேவை நாட்டையே ஒரு புரட்டு புரட்டிப் போட்டது எனச் சொல்லாம். அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் அன்லிமிடட் 4ஜி சேவையை வழங்கியது பல துறைகள் முன்னேறக் காரணமாக இருந்தது. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் இணையத்தை அணுகும் சுதந்திரத்தை அது கொடுத்தது. இந்தச் சூழலில் டெலிகாம் துறை அடுத்த கட்டத்திற்குச் செல்ல தாயாராகிவிட்டது.
எப்போது
பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டில் இன்று 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறார். இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் 5ஜி தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய மொபைல் சந்தையாக இந்தியா இருப்பதால், 5ஜி சேவை தொடக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இன்று நாட்டில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினாலும் கூட அவை உங்கள் மொபைலுக்கு வர இன்னும் சில வாரங்கள் பிடிக்கும். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தீபாவளி சமயத்தில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
வேகம்
நாம் இப்போது பயன்படுத்தும் 4ஜி சேவையை விட பல மடங்கு வேகமானதாக இந்த 5ஜி சேவை இருக்கும். அதிவேக இணையம் காரணமாக ஒரே நேரத்தில் பல ஆயிரம் மொபைல் போன்கள் கனெக்ஷனில் இருக்க முடியும். இணையச் சேவை மிக வேகமாக இருக்கும் என்பதால் முழு நீளப் படத்தைக் கூட வெறும் சில நொடிகளில் 5ஜி சேவையில் நம்மால் டவுன்லோட் செய்ய முடியும். சுருங்கச் சொன்னால் 5ஜி சேவை நாட்டின் இணையே வேகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
செலவு
5ஜி சேவையில் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜிபி வரை கிடைக்கும். இந்த 5ஜி சேவைக்கான ஏலம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் மொத்தம் ரூ. 1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு கிட்டதட்ட பாதி அலைக்கற்றையை வாங்கியது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ரூ.43,084 கோடிக்கும் வோடபோன் ஐடியா 18,799 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை வாங்கியது.
மாடல்கள்
5ஜி நெட்வொர்க்குகள் இரு முறைகள் உள்ளன. ஸ்டேன்ட் அலோன் (standalone) மற்றும் நான்-ஸ்டேன்ட் அலோன் (non- standalone) என இரு மாடல்கள் உள்ளன. இதில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களுக்கு எது ஏற்றதோ அந்த முறையைத் தேர்ந்தெடுத்து உள்ளன. ஸ்டேன்ட் அலோன் மாடலில் 5G நெட்வொர்க்கிற்கு தனியாக உபகரணங்களைத் தேவை. அதேநேரம் நான்-ஸ்டேன்ட் அலோன் மாடல் என்பது 4G கோர் உள்கட்டமைப்பின் உதவியைக் கொண்டு இயங்குகிறது.
முக்கிய நிறுவனங்கள்
இதில் ஸ்டேன்ட் அலோன் மாடலுக்கு முதலில் அதிக முதலீடு தேவை. ஜியோ நிறுவனம் ஸ்டேன்ட் அலோன் மாடலில் தான் 5ஜி சேவையை கொண்டு வர உள்ளது. இதற்காக அந்நிறுவனம் ரூ. 2 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளது. இருப்பினும், தனியாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதால் இதை விரிவுபடுத்த அதிக காலம் ஆகும். நான்-ஸ்டேன்ட் அலோன் மாடலை ஏர்டெல் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் குறைந்த காலத்தில் பல நகரங்களுக்குச் சேவையை விரிவுபடுத்த முடியும்.
முக்கிய நகரங்கள்
5ஜி சேவை முதலில் முக்கிய நகரங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும். ஜியோ நிறுவனம் முதற்கட்டமாக டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய 4 நகரங்களில் 5ஜி சேவையைக் கொண்டு வருகிறது. ஏர்டெல்லும் இதேபோல படிப்படியாகவே 5ஜி சேவையைக் கொண்டு வர உள்ளது. 5ஜி சேவைக்கு எனத் தனியாக சிம் வாங்கத் தேவையில்லை. உங்கள் ஏரியாவில் 5ஜி சேவை இருக்கிறதா என்பதைக் கண்டறியும் வசதியையும் ஏற்படுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கட்டணம்
என்னதான் 5ஜி இணையம் 4ஜியை விடப் பல மடங்கு வேகமாக இருக்கும் என்றாலும் கூட விலை சற்று குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. மத்திய ஐடி துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூட இணையச் சேவைக்கு மிக அதிக கட்டணம் கொடுக்க தேவைப்படாது என்றே தெரிவித்து இருந்தார். 4ஜி விலை அளவிலேயே அல்லது அதைவிடச் சற்று அதிகமாக 5ஜி விலை இருக்கும் எனக் கூறப்படுகிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.