இன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
டெல்லி: இந்தியாவில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
இந்தியா, தனது வளர்ச்சிப் பயணத்தின் அடுத்தக்கட்டமாக, 2ஜி,3ஜி,4ஜி-யைத் தொடர்ந்து, மொபைல் வாசிகள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் 5ஜி தொழில் நுட்பத்திற்கு களமிறங்கியுள்ளது. 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகியவற்றுடன் அதானி டேட்டா நெட்வொர்க் நிறுவனமும் களம் இறங்கியது. ரூ.1.5 லட்சம் கோடிக்கான அலைக்கற்றைகளை இந்த நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.
ஏலம் முடிந்த கையுடன் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டன. முதல்கட்டமாக, முக்கியமான நகரங்களில் 5ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணியில் டெலிகாம் நிறுவனங்கள் பிசியாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது: தொலைத் தொடர்புத் துறையில் ரூ.2.5 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை முதலீடுகள் குவியும் என்று எதிா்பார்க்கிறோம். இது மிகப் பெரிய முதலீட்டுத் தொகை ஆகும். ஏற்கெனவே, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொலைத்தொடர்புத் துறை முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி தகவல் தொழில்நுட்ப தேவை அறிமுகப்படுத்தப்படும்.
5ஜி சேவைகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை அமைப்பதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வரும் அக்டோபர் மாதத்தில் அந்த சேவை அறிமுகப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் வெகு வேகமாக விரிவுபடுத்தப்படும்.
5ஜி சேவைகளுக்கான தொலைத்தொடர்பு கம்பிகள் பதிப்பது, சாலைக் கம்பங்கள் அமைப்பது ஆகியவற்றுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் 5ஜி உள்கட்டமைப்பு அமைப்பதற்கான அனுமதி பெறுவதற்கு நிறுவனங்கள் இதுவரை 343 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்தியுள்ள சீா்திருத்தங்கள் காரணமாக, இந்த காத்திருப்பு காலம் 22 நாட்களாகக் குறைந்துள்ளது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.