உலக நாடுகளிடம் இருந்து குவியும் மருத்துவ உதவிகள்.. 92 ஆக்சிஜன் செறியூட்டிகளை அனுப்பிய டென்மார்க்
டெல்லி: பல்வேறு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட 11,325 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 6.1 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை நாட்டிலுள்ள பல மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. முதல் அலையுடன் ஒப்பிடும்போது 2ஆம் அலையின் பாதிப்பு அதி தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
புதுவையில் 2 முக்கிய பதவிகளை குறிவைத்துள்ள பாஜக.. எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா தாமதமாக காரணம் என்ன
கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதேபோல மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும் ஆக்சிஜன் கிடைக்காமலும் உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்தன.
உலக நாடுகள் உதவி
கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன. அதன்படி கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பி வருகின்றன. உலக நாடுகளின் உதவிகளை சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிற இந்தியா ஏற்றுக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
மத்திய அரசு அறிக்கை
இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளிடம் இருந்து பெறப்படும் மருத்துவ உதவி பொருட்களை மாநிலங்களுக்கு விரைவாக வழங்க பல அமைச்சகங்களும் துறைகளும் ஒருங்கிணைந்து இயக்கி வருகின்றன. இதுவரை உலக நாடுகளிடம் இருந்து 11,325 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டரகள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்டுகள் பெறப்பட்டுள்ளன.
எந்தெந்த நாடுகள்
மேலும், 8526 வென்டிலேட்டர்கள், 6.1 ரெம்டெசிவிர் குப்பிகளை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளன. இந்த மருத்து பொருட்கள் தேவைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டென்மார்க் உதவி
குறிப்பாகக் கடந்த வாரம் தான் பிரிட்டன் நாட்டிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களும், செறிவூட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று மற்றொரு ஐரோப்பிய நாடான டென்மார்க்கிடம் இருந்து 92 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தியா பெற்றுள்ளது.