1975ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறை.. இந்திய ராணுவம் மீது சீனா தாக்குதல்.. பதிலடிக்கு இந்தியா தயார்
டெல்லி: இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
1967ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு சிறு போர் நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் 80 வீரர்களும், சீன தரப்பில் 400 வீரர்களும் கொல்லப்பட்டனர்.
சிக்கிம் பகுதியில் இந்த மோதல் நடைபெற்றது 1962 முதல் உரசல் ஆரம்பித்து. 1967ல் முடிவடைந்தது. இதுதான் இந்தியா மற்றும் சீனா இடையே நடைபெற்ற கடைசி துப்பாக்கி சண்டை என்று பெரும்பாலும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை என்னவென்றால் 8 வருடங்கள் கழித்து, 1975ம் ஆண்டு, மறுபடி ஒரு முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் ரைபிள்ஸ் ஜவான்கள் சீனாவின் துலுங் லா என்ற பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகினர். அருணாச்சல பிரதேசத்தின் எல்லை பகுதியில் உள்ள இந்த இடத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
நடு இரவில் சண்டை.. கற்களை வைத்து தாக்கிய சீன வீரர்கள்.. 3 இந்திய வீரர்கள் மரணம்.. என்ன நடந்தது?
2005ம் ஆண்டு ஒப்பந்தம்
இந்த நிலையில்தான் 2005-ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரு நாட்டு ராணுவத்தில் எந்த ராணுவம் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்றாலும், மறுபுறம் உள்ள ராணுவம் பேனரை உயர்த்திப் பிடித்து, நீங்கள் உங்கள் எல்லைக்கு திரும்பிப் போங்கள் என்று சொல்வது வழக்கம். இதுதான் இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.
முதல் முறை தாக்குதல்
இரு நாட்டு ராணுவ வீரர்களும் இதுபோல பேனர்களை பிடித்து எதிரி நாட்டு ராணுவ வீரர்களை திரும்பிப் போகச் செய்து உள்ளனர். எங்காவது ஒரு இடத்தில் தெரியாத்தனமாக துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கலாமே தவிர, இத்தனை வருடங்களில், வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடந்தது இல்லை. ஆனால் இப்போது லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் முதல்முறையாக இத்தனை வருடங்களுக்குப் பிறகு சீன தரப்பு இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சீன ராணுவத்தினர் கல் மற்றும் கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவத்தின் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
பதிலடி கொடுத்துதான் நமக்கு பழக்கம்
இந்திய தரப்பும் பதிலடி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளிவருகின்றன. எது எப்படி இருந்தாலும் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது. எப்போதுமே பாகிஸ்தான் எல்லையில் எதிரிகள் துப்பாக்கி சூடு நடத்தும் போது, நமது தரப்பில் நிகழ்ந்த உயிரிழப்புகளை விட அதிகப்படியான உயிரிழப்பை பதிலடியாக கொடுப்பது நமது ராணுவத்தின் வழக்கம். இப்போதும் அதே தாக்குதல் யுக்தியை இந்திய ராணுவம் கையில் எடுத்தால் சீனாவுக்கு கடும் இழப்பு காத்திருக்கிறது என்று சொல்லலாம்.
இந்திய ராணுவத்தின் வீரம்
மலைப்பகுதிகளில் மிக சிறப்பாக செயல்படக்கூடிய உலகத்தில் நம்பர் ஒன் ராணுவம் என்ற பெயரைப் பெற்றுள்ளது இந்திய ராணுவம். இதை சீன ராணுவ நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் இந்திய ராணுவம் உலகின் நம்பர் ஒன் ராணுவம் என்ற அந்தஸ்தில் உள்ளது. எனவே சீன தரப்பு வாலாட்டி விட்டு திரும்பிச் செல்ல முடியாது. எல்லையில் இந்திய ராணுவம் கடும் பதிலடிகளை அடுத்தடுத்து கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் லடாக் எல்லையில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மிகப் பெரும் பதட்டம் தொற்றிக் கொண்டு உள்ளது.