"3 மாசம் சஸ்பெண்ட் கொஞ்சம் ஓவர் தான்.." பயணி சிறுநீர் கழித்த விவகாரம்! ஏர் இந்தியா ஆதங்கம்
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் விமானி 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அதிகபட்ச நடவடிக்கை என்று ஏர் இந்தியா நிறுவனம் ஆதங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானத்தில் நடைபெற்ற அந்த விரும்பத்தகாத சம்பவத்தை விமானக் குழு உறுப்பினர்கள் நிர்வாகத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
ஒரு பெண் பயணி மீது அனைவர் முன்னிலையிலும் ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ஏர் இந்தியா அதிகம் என்று கூறியுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த பயணி.. ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் ஃபைன்.. பைலட் 3 மாதம் சஸ்பெண்ட்
அருவருக்கத்தக்க செயல்
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்குக் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வந்த விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஒருவர் போதையில் சிறுநீர் கழித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதால் அமெரிக்க நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்த அவரது வேலையும் பறிபோனது. மேலும், 30 நாட்களுக்கு அவர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, பெண் பயணி மீது பட்டது தனது சிறுநீரே அல்ல என்றும், அது அப்பெண்ணின் சிறுநீர்தான் எனவும் நீதிமன்றத்தில் சங்கர் மிஸ்ரா வாதாடி வருகிறார்.
ரூ.30 லட்சம் அபராதம்
இந்நிலையில், விமானத்தில் நடைபெற்ற அந்த விரும்பத்தகாத சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாளர், அந்நிறுவனத்தின் விமானச் சேவை இயக்குநர், சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மற்றும் குழு உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர்கள் சார்பில் கடந்த வாரம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த டிஜிசிஏ, ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
விமானி சஸ்பெண்ட்
மேலும், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவை பிரிவு இயக்குநருக்கும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல, சம்பந்தப்பட்ட விமானத்தில் பொறுப்பு விமானியின் உரிமத்தை 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்தும் டிஜிசிஏ உத்தரவிட்டது. தற்போது இந்த நடவடிக்கையைத் தான் ஏர் இந்தியா நிறுவனம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமானத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்காக விமானியின் உரிமம் 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது அதிகபட்ச நடவடிக்கை.
விமானக் குழுவுக்கு வாழ்த்து
இந்த நடவடிக்கைக்கு எதிராக விமானி மேல்முறையீடு செய்வதற்கு நாங்கள் துணை நிற்போம். பயணி மோசமாக நடந்துகொண்டார் என்பதை விமானக் குழு உறுப்பினர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. இருந்தபோதிலும், அந்த நிகழ்வை நம்பிக்கையுடன் கையாண்ட குழு உறுப்பினர்களுக்கு ஏர் இந்தியா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.