இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அனுப் சந்த்ரா பாண்டே நியமனம்.. உ.பியின் முன்னாள் தலைமை செயலாளர்
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அனுப் சந்த்ரா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரு தேர்தல் ஆணையரின் பதவி காலியாக இருந்த நிலையில் அனுப் சந்த்ரா பாண்டே இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அனுப் சந்த்ரா பாண்டே உத்தர பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் 1984 பேட்ச்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உத்தர பிரதேசத்தின் தலைமை செயலாளராக பணியாற்றியவர். முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு நெருக்கமானவராக பார்க்கப்பட்டார்.
37 வருடங்கள் இவர் உத்தர பிரதேச ஆட்சி பணிகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார். உத்தர பிரதேச தலைமை செயலாளராக இருந்து 2019ல் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அனுப் சந்த்ரா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா உள்ளார். அதேபோல் ஆணையர்களில் ஒருவராக ராஜிவ் குமார் உள்ளார். இன்னொரு ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில் அந்த பதவிக்கு அனுப் சந்த்ரா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த வருடம் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மிக கடுமையான பலப்பரீட்சையை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் உ.பி ஐஏஎஸ் அதிகாரியை, அதுவும் ஆதித்யநாத்திற்கு கீழ் தலைமை செயலாளராக இருந்த அனுப் சந்த்ரா பாண்டே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.