பாஜகவுக்கு பேரழிவு.. டெல்லி, இமாச்சல் தேர்தல் தோல்வியால் சு.சாமி கடும் கோபம்..மோடி மீது ‛அட்டாக்’
டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில் பாஜகவுக்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ஆக்ரோஷமாக கூறியுள்ளதோடு, பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோரை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்துக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் குஜராத்தில் சரித்திர வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது. மாறாக இமாச்சல பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் வெளியான டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மியிடம், பாஜக வீழ்ந்துள்ளது கடந்த 2 நாட்களில் அதாவது நேற்று முன்தினம், நேற்று வெளியான இந்த 3 தேர்தல் முடிவுகளில் ஒன்றில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மாறாக 2 இடங்களில் அதிகாரத்தை பாஜக இழந்துள்ளது.
மிகப் பெரிய வெற்றி! தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொன்ன பிரதமர் நரேந்திர மோடி! இமாச்சலும் ஓகே தானாம்!
குஜராத்தில் பாஜக வெற்றி
அதன்படி நேற்று குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. 186 தொகுதிகள் உள்ள குஜராத்தில் பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். குஜராத்தில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி தான் 149 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதித்து இருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸின் சாதனையை பாஜக முறியடித்துள்ளது.
இமாச்சலில் ஆட்சியை இழந்த பாஜக
இமாச்சல பிரதேச மாவட்டத்தை பொறுத்தமட்டில் பாஜக ஆட்சியை இழந்தது. இங்கு மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது. 3 சுயேச்சைகள் வெற்றி பெற்ற நிலையில் ஆம்ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லி மாநகராட்சியில் பாஜக தோல்வி
மேலும் நேற்று முன்தினம் டெல்லி மாநகராட்சி தேர்தல் நடந்தது. டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் இருந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்று அசத்தியது. 250 வார்டுகளில் 134 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி வெறும் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. மேலும் 3 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். கடந்த 2007 ம் ஆண்டு முதல் டெல்லி மாநகராட்சியின் அதிகாரத்தை பாஜக கைப்பற்றி வந்தது. இந்நிலையில் தான் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சியின் அதிகாரத்தை பாஜக இழந்துள்ளது.
சுப்பிரமணியசாமி கருத்து
இந்நிலையில் தான் டெல்லி மாநகராட்சி மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக தோற்றது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவராக சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதில் வழக்கம்போல் பாஜக மேலிடத்தை அவர் விமர்சனம் செய்துள்ளதோடு, பாஜகவை வளர்ப்பது தொடர்பாக அட்வைசும் அளித்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
மிகப்பெரிய அழிவு
கட்சியின் தலைவர் (ஜேபி நட்டா) இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். முன்னாள் முதலமைச்சரின் மகன் மத்திய அமைச்சராகவும்(அனுராக் தாகூர்), தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார். இருப்பினும் பாஜகவுக்கு கிடைத்த அழிவு என்பது மிகவும் பெரியது. 2024ல் நாம் மீண்டும் வெற்றி பெற வேண்டும். 1977 முதல் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சாந்தகுமார் இமாச்சல பிரதேசத்தில் தான் உள்ளார். அவர் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தல் பற்றி..
மேலும் டெல்லி மாநகராட்சியில் பாஜக தோற்றது பற்றி அவர், ‛‛நடந்து முடிந்த 3 தேர்தல்களில் 2 மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் உள்ளது. அதாவது பாஜகவை தோற்கடிக்க அரசியல் கட்சிகள் உருவாகக்கூடாது என்பது தான். தற்போதைய மோடி அரசு பொருளாதாரம் மற்றும் குறிக்கோளுடன் செயல்படும் நாடுகளுடனான உறவில் தோல்வி கண்டுள்ளது'' என்றார்.