குடியரசு தலைவர் உரை.. பாஜகவின் தேர்தல் பிரசாரம் போல உள்ளது.. காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சனம்
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை. ஆனால் பாஜக தனது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை குடியரசு தலைவரைக் கொண்டு தொடங்கி இருப்பதுபோல் அவரது உரை உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது.
மரபுப்படி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். குடியரசு தலைவர் தனது உரையில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார்.
பெரும் பதற்றம்.. நாகையில் வெடித்த பாஜக-காங்கிரஸ் மோதல்! பிபிசி ஆவணப்படத்தை பாதியில் நிறுத்திய போலீஸ்
கனவுகளை நனவாக்க
குடியரசு தலைவரின் உரையில் குறிப்பாக, சர்ஜிக்கல் தாக்குதல், சட்டப்பிரிவு 370 நீக்கம் முதல் முத்தலாக் நீக்கம் என அரசு தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளது. இந்த அரசு நிலையானது, அச்சமற்றது, தீர்க்கமானது, மிகப்பெரிய கனவுகளை நனவாக்க உழைக்கக்கூடியது. ஏழைகளை மேம்படுத்துவதையே தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சசி தரூர் விமர்சனம்
வீடு கட்டும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், மின்இணைப்பு வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் என ஏழைகளின் சிரமங்களை போக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பன உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குடியரசுத்தலைவர் உரையில் இடம் பெற்றன. இந்த நிலையில், குடியரசுத்தலைவர் உரை பாஜக தேர்தல் பிரசாரத்தை போல இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சசி தரூர் விமர்சித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் புகழ்ந்து பேசியிருக்கிறார்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசி தரூர் கூறியதாவது:- ''குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை. ஆனால், குடியரசுத் தலைவர் மூலமாக பாஜக தனது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை அவரைக் கொண்டு தொடங்கி இருப்பதுபோல் தோன்றுகிறது. குடியரசுத்தலைவரின் மொத்த உரையுமே தேர்தல் பிரச்சார உரையாகத்தான் இருந்தது. அரசு செய்த அனைத்தையும் குறிப்பிட்டு குடியரசுத்தலைவர் புகழ்ந்து பேசியிருக்கிறார். அரசு செய்யத் தவறியவை குறித்து குறித்து குடியரசுத் தலைவர் எதையும் குறிப்பிடவில்லை'' என தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு குறித்து எதுவும் இல்லை
அதேபோல், குடியரசுத்தலைவர் உரை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "குடியரசுத்தலைவர் உரை என்பது அரசின் உரையாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த உரையும் அப்படித்தான் இருந்தது. அரசின் விருப்பத்தை வலியுறுத்தும் வகையில் குடியரசுத்தலைவரின் உரை இருந்தது. குடியரசுத்தலைவரின் உரைக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கிறது. குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்தின் போது எங்கள் கருத்து தெரிவிக்கப்படும். வேலை வாய்ப்பு குறித்து குடியரசுத்தலைவர் உரையில் எதுவும் இல்லை. இந்த அரசாங்கம் பேசுகிறதே தவிர செயலில் எதுவும் இல்லை. நடப்பு கூட்டத்தொடரில் வேலை வாய்ப்பு இன்மை, சீன எல்லை பிரச்சினை, பண வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப இருக்கிறோம்" என்று கூறினார்.