"மொழி சிதைந்தால் நாம் வாழ்ந்தும் பயனில்லை" புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னையில் 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த புத்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மொழியை காக்கும் கடமை அரசியல் இயக்கங்களை போல் எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும். தங்களின் எழுத்தை மொழியை காப்பதற்கான மக்கள் எழுத்தாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல் மொழி சிதைந்தால் இனம், பண்பாடு, அடையாளம், தமிழர் என்ற தகுதியையும் இழப்பதோடு, நாம் வாழ்ந்தும் பயனில்லை என்று தெரிவித்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் தேவி பாரதி, சந்திரா தங்கராஜ் , தேவதேவன், சி.மோகன், பிரளயன், பா.ரா.சுப்பிரமணியன் ஆகிய 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளுடன் தலா ரூ.1 லட்சமும், 9 பேருக்கு பபாசி சார்பில் விருதுகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
1,000 அரங்குகள்.. லட்சக்கணக்கான புத்தகங்கள்! சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தகக் கண்காட்சி
1,000 அரங்குகள்
இன்று தொடங்கியுள்ள புத்தக கண்காட்சி வரும் 22 தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வையிடலாம். கடந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ் திருவிழா
அதுமட்டுமல்லாமல் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்குகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருப்பது தமிழாட்சி என்பது அனைவருக்கும் தெரியும். புத்தக காட்சியும், இலக்கிய திருவிழாவும் தமிழ் திருவிழாக்களாக அமைந்துள்ளன.
அறிவு வளர்ச்சி
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. புத்தக காட்சியில் புத்தக விற்பனை மட்டுமின்றி சிறப்பான இலக்கிய சொற்பொழிவும் நடத்தப்படுகிறது. பதிப்பகங்களுக்கு உதவி செய்வதும், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவதும் நாட்டில் அறிவொளி பரவுவதற்கு தான். புத்தக கண்காட்சிகளால் இலக்கிய எழுச்சி, அறிவு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி
தமிழ் மீதும், புத்தகங்கள் மீதும், எழுத்தின் மீதும் மாறா அன்பு கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். அரசியலில் எவ்வளவு முரண்பாடு இருந்தாலும், சிறந்த எழுத்தாளர் என்றால் அவர்களை பாராட்ட தயங்க மாட்டார் கருணாநிதி. எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் எத்தனையோ சிறப்புகளை அரசு செய்து வருகிறது.
மொழியை காக்கும் கடமை
மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் நமது பண்பாடு சிதைந்துவிடும், பண்பாடு சிதைந்தால் நமது அடையாளம் போய்விடும், அடையாளம் போனால் தமிழர்கள் என்று சொல்லும் தகுதியை இழப்போம், தமிழர் என்ற தகுதியை இழந்தால் நாம் வாழ்ந்தும் பயனில்லை. மொழியை காக்கும் கடமை அரசியல் இயக்கங்களை போல் எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும். தங்களின் எழுத்தை மொழியை காப்பதற்கான மக்கள் எழுத்தாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.