தேர்தல் சீர்திருத்த மசோதா: சிறப்பு அம்சம்கள் என்னென்ன?.. கடுமையாக எதிர்ப்பு வருவது ஏன்?
டெல்லி: நாட்டில் போலி வாக்காளர் அட்டை பெறுவதை தடுப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் செய்யும் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தேர்தல் சீர்திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் சீர்திருத்த மசோதாவின் சிறப்பு அம்சம் என்ன? என்பது பற்றி இப்போது காண்போம். இந்த மசோதா மூலம் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சம் என்னென்ன?
* அதாவது இந்த நாள் வரை தேர்தல்கள் கல்லூரிகள், பள்ளிகளில் வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில் இனிமேல் வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் எந்த கட்டிடத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம். சமூக நல கூடங்கள் , திருமண மண்டபங்கள் போன்ற கட்டிடத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் எடுத்து தேர்தல் நடத்தலாம்.
* இந்த மசோதாவின் முக்கிய அம்சமே ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டை(Voter ID) இணைக்கப்பதுதான். ஆனால் இது கட்டாயம் கிடையாது. தனி நபர் விருப்பத்துக்கு உட்பட்டது. போலி வாக்காளர் அட்டையை தடுப்பதற்கே இந்த முறை கொண்டு வரப்படுகிறது.
* ராணுவத்தில் பணியில் இருக்கும் ராணுவ பெண் அதிகாரிக்கு பதிலாக இனி அவரது கணவர் வாக்களிக்கலாம் என்ற முறை கொண்டு வரப்படும். இந்நாள் வரை பணியில் இருக்கும் பாதுகாப்பு படையில் வீரர்களுக்கு பதிலாக அவரது மாணவி மட்டும் வாக்களிக்கும் முறை இருந்தது.
* 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க இனி ஆண்டுக்கு 4 முறை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு தற்போது ஆண்டுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
* தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை நீக்கி விட்டு, தங்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை மத்திய அரசு சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன.
* தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கவுள்ள நிலையில் அந்த அதிகாரத்தை மத்திய அரசு தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்ளலாம் என்பதும் அவர்களின் கருத்து. இது மிகவும் ஆபத்தான மசோதா, இதை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.
* முன்னதாக இன்று மக்களவையில் தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ''ஆதார் என்பது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல. நீங்கள் வாக்காளர்களிடம் ஆதார் அட்டையைக் கேட்டால், உங்களுக்குக் கிடைப்பது வசிப்பிடத்தைப் பிரதிபலிக்கும் ஆவணம் மட்டுமே. நீங்கள் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறீர்கள்'' என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications