ராகுல் ஒரு ‛புத்திசாலி’.. புகழ்ந்து பேசிய ரகுராம் ராஜன்.. விரைவில் காங்கிரஸில் ஐக்கியம்? ட்விஸ்ட்!
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமீபத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தற்போது ‛‛ராகுல் காந்தி ஒரு புத்திசாலி. அவரை பப்பு என கூறுவது துரதிர்ஷ்டவசமானது'' என ரகுராம் ராஜன் புகழ்ந்து பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்த கேள்விக்கும் அவர் கொடுத்த பதில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி பராத் ஜோடோ யாத்திரையை துவங்கி உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 2022 செப்டம்பரில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார்.
பாஜக வெறுப்பை பரப்பி பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. இதனால் இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் எனக்கூறி ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்களில் ஜம்மு காஷ்மீரை அடைய உள்ளது.
பஞ்சாப்பில் யாத்திரை
தற்போது இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானாவை கடந்து பதர்பூர் எல்லை வழியாக கடந்த டிசம்பர் 24ம் தேதி தலைநகர் டெல்லியை அடைந்தது. அதன்பிறகு தற்போது பஞ்சாப்பில் பாதயாத்திரை நடக்கிறது. அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் சென்று ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைய உள்ளது.
ரகுராம் ராஜன் பங்கேற்பு
ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் எழுத்தாளர்கள், நடிகர் நடிகைகள், சமூக ஆர்வலர்கள், ஓய்வு ஐஎஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என ஏராளாமனவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூரின் படோதி பகுதியில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்று ராகுல் காந்தியுடன் நடந்து சென்றார்.
ரகுராம் ராஜன் பேட்டி
இந்நிலையில் தான் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற ரகுராம் ராஜனிடம் ‛இந்திய டூடே' செய்தி நிறுவனம் பேட்டி கண்டது. இதில் ரகுராம் ராஜனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரகுராம் ராஜன் பதிலளித்தார். இந்த வேளையில் காங்கிரஸ் கட்சியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார். இதுபற்றி ரகுராம் ராஜன் கூறியதாவது:
ராகுல் காந்தி புத்திசாலி
ராகுல் காந்தியை பப்பு என சிலர் அழைப்பது துரதிர்ஷ்டவசமானது என நினைக்கிறேன். நான் பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடி உள்ளேன். ராகுல் காந்தி பப்பு இல்லை. அவர் ஒரு புத்திசாலி. எதிலும் ஆர்வம் கொண்ட மனிதர். தற்போதைய சூழலில் முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டிய விஷயங்கள், அடிப்படை அபாயங்கள், மதிப்பிடும் திறன் உள்ளிட்டவற்றை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இதனை திறமையாக ராகுல் காந்தி செய்வார் என நான் நினைக்கிறேன்'' என்றார்.
காங்கரஸில் ரகுராம் ராஜன்
இந்த வேளையில், ‛‛சமீபத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைவீர்களா?'' எனும் வகையில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரகுராம் ராஜன், ‛‛காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பங்கேற்றேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை'' என்றார். இதன் மூலம் ரகுராம் ராஜன் காங்கிரஸ் உள்பட எந்த கட்சியிலும் இணைய விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.
பாஜகவினர் விமர்சனம்
முன்னதாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ரகுராம் ராஜன் பங்கேற்றபோது பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரகுராம் ராஜன் மத்திய அரசின் பொருளாதார கொள்கையை விமர்சனம் செய்திருந்தார். அதன்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றியும், இந்திய பொருளாதாரம் குறித்து கடந்த காலங்களில் கவலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.