போருக்கு ரெடியாகிறதா இந்தியா? பாக். வயிற்றில் புளியை கரைக்கும் சிக்னல்கள்
Recommended Video
டெல்லி: காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் இந்திய துணை ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகிவிட்டது.
காஷ்மீரில் நேற்று, சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இதையடுத்து இந்தியா தனது தரப்பிலிருந்து அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.
தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து இயங்குவதால், இதை முன்வைத்து, பாகிஸ்தானை உலக நாடுகள் மத்தியில் தனிமைப்படுத்தும் முயற்சியை இந்தியா துவங்கியுள்ளது.
Awantipora Attack: காஷ்மீர் தாக்குதல்... தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம்
மோடி பகிரங்க எச்சரிக்கை
இதனிடையே, இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட, மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பொது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டனர். அவர்களும், அதன் பின்னணியில் இருப்பவர்களும், இதற்காக மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுவிட்டது, என்று பகிரங்கமாக தெரிவித்தார். அண்டை நாடு என பாகிஸ்தானையும் மறைமுகமாக மோடி குறிப்பிட்டார்.
போர் பிரகடனம்
இந்திய பிரதமர் ஒருவர், அண்டை நாட்டுக்கு எதிராக பகிரங்கமாக இவ்வாறு பேசியது இதுதான் முதல் முறையாகும். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் அறிவித்துள்ளதை வைத்து பார்த்தால், இது, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின், பகிரங்க போர் பிரகடனம் என்று கூறுகிறார்கள் ராணுவத்துறை வல்லுநர்கள்.
நெருங்கும் தேர்தல்
இந்தியாவில் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தாக்குதலை எளிதாக விட்டுவிட முடியாத நிலையில், மோடி அரசு உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக தைரியமான முடிவை எடுக்கவில்லை என்ற விமர்சனத்தோடு மக்களை சந்தித்து வாக்கு கேட்பதை மோடி விரும்பவில்லை. எனவே பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பதிலடி கொடுக்க இந்தியா ரெடியாகியுள்ளதாக தெரிகிறது.
துல்லிய தாக்குதல்
2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், காஷ்மீரின் யூரி பகுதியில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதில், 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்திய ராணுவம், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், நடத்தி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடி காட்டியது. எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை கூண்டோடு அழித்துக்கட்டி திரும்பியது.
பதிலடி பலமாக இருக்கும்
இந்த நிலையில், அதைவிட பெரிய தாக்குதல் தற்போது புல்வாமா பகுதியில் நேற்று அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே முன்பைவிட பெரிய அளவுக்கான பதிலடியை இந்தியா தர ரெடியாகிவிட்டது. இதன் முதல் கட்டமாக பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுக்காக வழங்கப்பட்ட மிகுந்த ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தை இந்தியா இன்று ரத்து செய்துவிட்டது. பொருளாதார ரீதியாக பாகிஸ்தானை பலவீனப்படுத்தும் முயற்சி இது. ஏனெனில், பொருளாதாரத்தில் பலவீனமாக உள்ள ஒரு நாட்டால், போரை எதிர்கொள்ளவோ, அல்லது போர் தொடுக்கவோ முடியாது.
பொருளாதாரம்
இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிட்டால், பாகிஸ்தான் 125 மடங்கு பின்தங்கியுள்ளது. சமீபகாலமாக அங்கு பெரிய பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான், சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார உதவிக்காக அலைக்கலிந்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தான் வலுவாக இல்லை. சீனாவின் உதவியை பாகிஸ்தான் நாடலாம் என்றாலும் கூட, முதலிலேயே, இந்த விஷயத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியை இந்தியா துவக்கிவிட்டது. உலகின் பல வல்லரசு நாடுகளும், இந்த தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
விலகும் சீனா
இதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய போர்களின்போது, சீனா ஒதுங்கியேதான் இருந்தது. அப்போதே அப்படி என்றால், இப்போது இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக முன்பைவிட வெகுவாக வளர்ந்த நாடு என்பதால், சீனா இந்த விஷயத்தில் தலையிடாது என்றே தெரிகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு கைகொடுக்கும் என்ற அச்சமும் சீனாவுக்கு உள்ளது.
முதல் பிரதமர்
இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியின், பொதுக்கூட்ட உரை முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்தை பிரித்தபோது, இந்திரா காந்தி கூட இவ்வாறு பொது இடத்தில், ராணுவ நடவடிக்கை குறித்து பேசவில்லை. ஆனால் இப்போது மோடி பகிரங்கமாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார். எனவே இந்தியா போருக்கு தயாராகிறதா என்ற கேள்வி பல மட்டங்களிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது.