இது முட்டாள்தனம்.. ப சிதம்பரம் சர்டிபிகேட்டை வாங்குங்க.. விளாசிய சுப்பிரமணிய சாமி.. என்ன நடந்தது?
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் எப்ஐஆர் கேட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தை பாஜகவின் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ‛‛இது ஒரு புகார் வழக்கு. இதில் எப்ஐஆர் கேட்பது முட்டாள்தனம்'' என அவர் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் பரிமாற்றத்தில் சட்டத்துக்கு விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வேலையை காட்டும் சீனா.. எல்லையில் கட்டும் பாலம்.. வெளியானது சேட்டிலைட் போட்டோ.. எகிறும் ராகுல்காந்தி
ராகுல்காந்தி 3வது நாள் ஆஜர்
சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உள்ளார். ராகுல்காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். நேற்றும், நேற்று முன்தினம் என 2 நாட்கள் ராகுல்காந்தி ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று 3வது நாளாக விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
தொடர் கைது
இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இன்றும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டடத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
ப சிதம்பரம் விமர்சனம்
மேலும் இந்த விஷயத்தில் மத்திய பாஜக மற்றும் அமலாக்கத்துறை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ப சிதம்பரம் கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்டம் மற்றும் ஜனநாயகத்தை மதிப்பது இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா?. எங்களுக்குப் போராட்டம் நடத்துகிற உரிமை உண்டு.
எப்ஐஆர் இன்றி...
தற்போதைய சூழலில் அமலாக்க பிரிவு உரிய முறையில் சட்டத்தை மதித்து நடந்தால் எங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லை. அமலாக்க பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை. இதுதான் பிரச்சனையாக உள்ளது. அமலாக்கத்துறை எதனடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளது? எப்ஐஆர். இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க முடியாது. எப்ஐஆர்யை எங்களுக்கு காட்ட முடியுமா?'' என கேள்வி கேட்டிருந்தார்.
முட்டாள்தனமானது
ப சிதம்பரத்தின் இந்த விமர்சனத்துக்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், ப சிதம்பரத்தின் சட்டப்படிப்பு டிகிரியை ரத்து செய்ய வேண்டும் என வெகுண்டெழுந்துள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இது ஒரு புகார் வழக்கு. இதில் எப்ஐஆர் கேட்பது எவ்வளவு முட்டாள்தனமானது. ப சிதம்பரத்தின் சட்டம் தொடர்பான டிகிரியை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.