2020 -ல் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 99% பெண் குழந்தைகளுக்கு எதிரானது.. என்சிஆர்பி
டெல்லி: 2020 ஆம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 99 சதவீதம் வழக்குகள் பெண் குழந்தைகளுக்கு எதிரானவை என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
என்சிஆர்பி எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் என்பது நாடு முழுவதும் ஐபிசியின் கீழ் பதியப்பட்ட குற்றவியல் டேட்டாக்களை ஆய்வு செய்து சேகரித்து வைத்துக் கொள்ளும் பொறுப்பு இந்த அமைப்பிற்கு உள்ளது. இந்த நிலையில் என்சிஆர்பியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குழந்தைகள் உரிமை அமைப்பான சிஆர்ஒய் (CRY) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் 28, 327 குற்றங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 28,050 குற்றங்கள் அதாவது 99 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிரானவை. இதனால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
16 வயது முதல் 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் மட்டும் 14, 092 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அது போல் 12 முதல் 16 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிராக 10,949 குற்றங்கள் நடந்துள்ளன. சிறுவர்கள், சிறுமிகள் இருவருமே பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்ற நிலை இருந்தாலும் என்சிஆர்பியின் ஆவணங்களின் அடிப்படையில் பெண் குழந்தைகளே அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
நேற்றைய தினம் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் குழந்தைகள் உரிமை அமைப்பான சிஆர்ஒய் (CRY)கூறுகையில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களது உரிமைகள் குறித்து பேசப்படுகின்றன. ஆனால் என்சிஆர்பியின் புள்ளிவிவரங்களை பார்க்கும் போது அவர்கள் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய பிரிவுகளில் ஒருவராகவே திகழ்கிறார்கள்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் அதிகமாக பலியாவதும் பாதிக்கப்படுவதும் பெண் குழந்தைகள்தான். இதை ஒதுக்கி வைத்துப் பார்க்கக் கூடாது. கல்வி, சமூகப்பாதுகாப்பு, ஏழ்மை, உள்ளிட்டவை பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வாழ சவாலானதாக உள்ளன. பாலியல் வன்முறை, பாலியல் சுரண்டல், துன்புறுத்தலுக்கும் பெண் குழந்தைகள் ஆளாகிறார்கள்.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட 3 காரணங்கள்! எப்போது சரியாகும்? சீனாவில் நடப்பது என்ன?
கடந்த சில ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கான கல்விச் சூழல், பாதுகாப்பு முறைகளில் வலிமை அடைந்து பெற்று வருகிறோம். ஆனால் இந்த முன்னேற்ற சூழலை கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கொரோனா பரவல், வறுமை, ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்க முடியாத நிலையால் பெண் குழந்தைகள் தங்கள் படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலை உள்ளது என CRY அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.