"30% அதிகம்.." ரூ 1250 கோடியை தாண்டிய புதிய நாடாளுமன்ற கட்டிட செலவு.. காரணம் என்ன.. முக்கிய தகவல்
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகளான சென்ட்ரல் விஸ்டா தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்ட செலவைக் காட்டிலும் கட்டுமான பணிகளின் பட்ஜெட் 30% வரை உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டி வருகிறது. சென்ட்ரல் விஸ்டா எனப்படும் இந்தக் கட்டுமான பணிகள் கொரோனா பரவலுக்கு இடையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படும் நிலையில், முதலில் அதற்குக் கட்டுமான பணிகளை முழுவதுமாக முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
8.45க்கு திடீர் விசிட்.. பாதுகாவலர்கள் இன்றி விஸ்டா கட்டுமானத்தை பார்வையிட்டாரா மோடி.. என்ன நடந்தது?
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
கடந்த காலங்களில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கப்பட்டிருந்த போதிலும், நாடாளுமன்ற கட்டுமான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் கூட வழக்குத் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த மனுக்களைக் கடந்த நவ. மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் கட்டுமான பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
30% அதிகம்
முதலில் இந்த சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு ரூ 977 கோடி செலவில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டை விட தற்போது கூடுதலாக 30% அதாவது ரூ 282 கோடி கூடுதலாக செலவாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் சென்ட்ரல் விஸ்டாவின் ஒட்டுமொத்த பட்ஜெட் கட்டி முடிக்கும் போது ரூ 1,250 கோடிக்கு மேல் உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் ஸ்டீல், சிமென்ட் பொருட்களின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி முடியுமா
இந்தத் திட்டத்திற்குக் கடந்த 2020 டிச. மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. டாடா நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்த கட்டுமான பணிகளில் இதுவரை 40% மட்டுமே முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், திட்டமிட்டபடி அக். மாதம் அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 130 ஏக்கர் பரப்பளவில் 4 மாடிகளை கொண்ட இந்த சென்ட்ரல் விஸ்டா பணிகளை முதலில் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இருப்பினும், அதன் பின்னர் இந்த ஆண்டு அக். மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல்
2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் கூட இந்த கட்டுமான பணிகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் அதில் குறைவான வசதிகளே உள்ளது. 1927இல் கட்டப்பட்ட அந்த கட்டிடம் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலோ அல்லது முறையான தீவிபத்து பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றிக் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்டிடத்தின் சிறப்புகள்
இதனால் புதிய அதிநவீன நவீன வசதிகளுடன் தற்போது இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுவருகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவை தொகுதி 888 எம்பிகள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதை 1,224 ஆக உயர்த்த முடியும். அதேபோல மாநிலங்களவையும் சுமார் 384 உறுப்பினர்கள் அமரும் வசதியுடன் இருக்கும். ஒவ்வொரு எம்பிகளுக்கும் 40 சதுர மீட்டர் அலுவலக இடம் இருக்கும். எம்பிகளின் அலுவலக கட்டுமானம் வரும் 2024க்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.