நீதித்துறை குறித்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்கவே முடியாது: பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்
டெல்லி: நீதித்துறை மீதான விமர்சனங்களுக்கு தாம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவே முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, சொகுசு இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் படத்தை பிரசாந்த் பூஷன் சமூக வலைதளங்களில் விமர்சித்திருந்தார். இதனால் பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து.
அத்துடன் கடந்த காலங்களில் நீதித்துறையை பிரசாந்த் பூஷன் விமர்சித்த விவகாரங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் அவருக்கான தண்டனை விவரம் கடந்த 20-ந் தேதி அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் தாம் மறு ஆய்வு செய்ய இருப்பதால் தண்டனை குறித்த விவாதங்களை நடத்த கூடாது என பிரசாந்த் பூஷன் மனுத் தாக்கல் செய்தார்.
இதனை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உங்களுடைய விமர்சனங்களை மறுபரிசீலனை செய்ய 2அல்லது 3 நாட்கள் அவகாசம் எடுத்து கொள்ளலாம்.. அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு என கூறி இருந்தனர். ஆனாலும் அப்போதே பிரசாந்த் பூஷன் இந்த கால அவகாசத்தை நிராகரித்திருந்தார்.
23 பேரில் ஒருவர்.. சோனியாவுக்கு ஏற்கனவே 2 லெட்டர் போட்ட குலாம் நபி.. இன்று ராகுலுடன் மோதல்!
அத்துடன், உங்களிடம் கருணையை நான் எதிர்பார்க்கவில்லை.. எனக்கு எந்த தண்டனை விதித்தாலும் ஏற்கவும் தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷனுக்கு கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் இன்று துணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தாம் மன்னிப்பு கேட்கவே முடியாது என திட்டவட்டமாக பிரசாந்த் பூஷன் கூறியிருக்கிறார். மேலும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உச்சநீதிமன்றமே கடைசி புகலிடம் என்றும் மன்னிப்பு கேட்பதிலும் கூட ஒரு நேர்மையான முறை இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்தான் கூறியிருக்கிறது எனவும் பிரசாந்த் பூஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.