ரபேல் கொள்முதல் தொடர்பாக விசாரணை தேவையில்லை.. 5 மனுக்களும் தள்ளுபடி.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
ரபேல் ஒப்பந்தம் சரியானதே, அரசின் கொள்கை முடிவில் தவறு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது. இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த ஒரு மாதமாக ரபேல் ஒப்பந்தத்தில் நடந்து முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள்.
ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.
காங்கிரஸ் வைத்திருந்த பிரம்மாஸ்திரம் வீழ்ந்தது.. ரபேல் வழக்கில் பாஜகவிற்கு பெரும் நிம்மதி!
என்ன குற்றச்சாட்டு
பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 போர் விமானங்களை இந்தியா வாங்குவதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.351 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
கடும் விசாரணை
இந்த வழக்கில் ரபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு ரபேல் விமானங்களை வழங்கும் டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரரை யார் தேர்வு செய்தது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக வேறு நிறுவனம் (ரிலையன்ஸ்) எப்படி தேர்வு செய்யப்பட்டது என்று நிறைய விவாதங்கள் செய்யப்பட்டது. மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனம் இதில் உள்ளே வந்தது எப்படி என்றே தெரியாது என்று கூறியது.
சிபிஐ விசாரணை
ஒரு மாதமாக நடந்த வழக்கு விசாரணையில் ஒப்பந்தம் தொடர்பாகவும், விமானத்தின் மாதிரி செயல்பாடு தொடர்பாகவும் நிறைய கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்கள். அதேபோல் ஏன் குறைவான விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது, இந்திய பாதுகாப்பு மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்கள். மனுதாரர் தரப்பு முதல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தும்படியும், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியது.
இன்று தீர்ப்பு
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முடிவிற்கு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதில் ரபேல் ஒப்பந்தம் சரியானதே, அரசின் கொள்கை முடிவில் தவறு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சரியானதே
மேலும் விமான ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை.சில சந்தேகம் காரணமாகவே இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டது. விமானம் வாங்கியது தொடர்பான நடைமுறையில் சந்தேகம் இல்லை. ரபேல் ஒப்பந்தத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணையோ, சிபிஐ விசாரணையோ செய்ய தேவையில்லை.
மனுக்கள் தள்ளுபடி
உச்ச நீதிமன்றம் நாட்டில் நடக்கும் அனைத்தையும் சரி செய்து கொண்டு இருக்க முடியாது. இந்த ஒப்பந்தத்தில் தவறு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை, மத்திய அரசு அளித்த பதில்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. இதன் மூலம் ரபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது