என் அண்ணன்.. பாஜக அரசுக்கு அஞ்சாத மாவீரன்! ராகுலை அம்பானி, அதானியால் வாங்க முடியாது - பிரியங்கா
டெல்லி: பெரு முதலாளிகளான அம்பானியும் அதானியும் அரசு நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், ஊடகங்களை வாங்கிவிட்டதாகவும், ஆனால், ராகுல் காந்தியை அவர்களால் ஒருபோதும் வாங்க முடியாது எனவும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி தெரிவித்து உள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தொடங்கும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானாவில் அவர் நடைபயணம் மேற்கொண்டார்.
இன்றோடு 47 மாவட்டங்கள் 10 மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்து இருக்கும் ராகுல் காந்தி, தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டு வந்தார். 109 வது நாளான இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத்தில் யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆஹா இது லிஸ்ட்லயே இல்லையே.. ஸ்டாலின் போட்ட மாஸ் உத்தரவு.. களமிறங்கிய சேகர் பாபு.. குஷியில் மக்கள்!
உபி எல்லையில் வரவேற்பு
முன்னதாக நேற்று டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைந்த ராகுல் காந்திக்கு டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையான லோனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ராகுல் காந்தியை அவரது சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் என பலரும் திரண்டு நின்று வரவேற்றனர்.
ராகுல் காந்தியின் உண்மை கவசம்
அப்போது பேசிய அவர், "பெரிய முதலாளிகளான அம்பானியும் அதானியும், ஏராளமான அரசியல்வாதிகளை வாங்கி இருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களையும் வாங்கிவிட்டார்கள். ஆனால், என்னுடைய சகோதரனை அவர்களால் ஒருபோதும் வாங்க முடியாது. ராகுல் காந்தி உண்மை என்னும் கவசத்தை அணிந்து இருப்பதால் அவரால் இந்த கடும் குளிர் காலத்திலும் குளிரை உணர முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.
ராகுல் காந்தி போர் வீரன்
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த யாத்திரை 3,000 கிலோ மீட்டரை உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைகிறது. இதை வரவேற்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது அண்ணனை பார்த்த நான் மிகவும் பெருமை அடைகிறேன். அரசாங்கம் அவரது பெயரை கெடுப்பதற்காக பல ஆயிரம் கோடியை செலவு செய்தது.
அன்பை பரப்பும் கடை
ஆனால், ராகுல் காந்தி தன்னுடைய வழியில் இருந்து பின்வாங்கவே இல்லை. ஏராளமான நிறுவனங்கள் ராகுல் காந்தியை குறிவைத்தன. ஆனால், அவர் அதை பார்த்து அஞ்சவே இல்லை. அவர் ஒரு போர் வீரன். ராகுல் காந்தி வெறுப்பை பரப்பும் சந்தையில், அன்பை பரப்பும் ஒரு கடையை திறக்க வருகிறார். அன்பை பரப்பும் அந்த கடைகளின் கிளைகளை உத்தரப்பிரதேசத்தில் நீங்கள் தொடங்க வேண்டும் என மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்." என்றார். பிரியங்கா காந்தியின் இந்த பேச்சை கேட்டு லோனி எல்லையில் கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
கடும் குளிர்
டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா ஆகிய வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. எனவே குளிர் தாங்கும் ஜாக்கெட்டுகளை பொதுமக்கள் அணிந்து வரும் நிலையில் ராகுல் காந்தியோ வெள்ளை நிற டீசர்ட்டுடனே ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதனை சுட்டிக்காட்டியே பிரியங்கா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.