நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன்.. "பல்டி" அடித்த பாபா ராம்தேவ்!
டெல்லி: இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்களுக்கும் யோகா குரு பாபா ராம்தேவ்விற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தான் விரைவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவிருப்பதாக ராம்தேவ் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த 2,3 மாதங்களாக எந்தளவுக்கு மோசமாகச் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளாலேயே நிரம்பின.
இந்தக் காலகட்டத்தில் நாட்டிலுள்ள மருத்துவர்களின் சேவை அளப்பரியது. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற, அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையுமே செய்தார்கள்.
ராம்தேவ் சர்ச்சை
இந்தச் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அலோபதி மருத்துவத்தை விமர்சிக்கும் வகையில் யோகா மாஸ்டர் ராம்தேவ்வின் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர், 'நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. கொரோனாவை விட அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன' என்று கூறியிருந்தார். இந்த வீடியோவுக்கு மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
மருத்துவ சங்கம்
இதையடுத்து இந்த வீடியோவுக்கு வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார். இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தினர். இருப்பினும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஜூன் 1ஆம் தேதியை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கருப்பு தினமாக கடைப்பிடித்தனர்.
ராம்தேவ் யூ டார்ன்
இந்நிலையில், தான் விரைவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவிருப்பதாக ராம்தேவ் அறிவித்துள்ளார். தனது போராட்டம் மருத்துவர்கள் அல்லது கொரோனா தடுப்பூசிக்கு எதிரானது இல்லை என்றும் அது மருந்து மாஃபியாவுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து பகிர்ந்து அளிக்கும் என்பது முக்கிய புரட்சிகரமான திட்டம் என்றும் இத்திட்டத்திற்கு மோடியைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடவுள் அனுப்பிய தூதர்கள்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எந்தவொரு நிறுவனத்துடனும் நாம் பகை கொண்டு இருக்கத் தேவையில்லை.. நல்ல மருத்துவர்கள் அனைவருமே இந்த பூமிக்குக் கடவுள் அனுப்பிய தூதர்கள். அவை இந்த பூமிக்கே மிகச் சிறந்த ஒரு பரிசு. ஒரு சில மருத்துவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால், அது அவர்களின் தனிப்பட்ட தவறுகள். இதற்காக நாம் ஒட்டுமொத்தமாக அனைத்து மருத்துவர்களையும் குறை சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
முற்றிலும் முரண்
பாபா ராம்தேவ் தற்போது கூறியுள்ள கருத்து, அவரது பழைய கருத்திற்கு முற்றிலுமாக நேர் மாறானது. கடந்த சில வாரங்களாகவே அலோபதி மருத்துவர்களை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் தான் ராம்தேவ். இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தினர் பிரதமர் மோடி, சுகாதாரத் துறை அமைச்சர் ஹரஷ் வர்தன் ஆகியோருக்கும் கடிதம் எழுதியிருந்தனர்,
ஐசிஎம்ஆரில் புகார்
மேலும், பாபா ராம்தேவ் அறிவியலுக்குப் புறம்பான, எவ்வித ஆதாரமும் இல்லாத கருத்துகளைப் பரப்பி வருகிறார் என்றும் அவர் போலி மருத்துவர் போல நடந்து கொள்கிறார் என்றும் ஐசிஎம்ஆர் அமைப்பிற்கும் மருத்துவ சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தான், நல்ல மருத்துவர்கள் இறைவனின் துதர்கள் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.