குடியரசு தினத்தை முன்னிட்டு 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியீடு!
இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய அத்தியாயமாக உச்சநீதிமன்றத்தின் 1091 தீர்ப்புகள், தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்றார். மகாராஷ்டிரா- கோவா வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சியில் பேசுகையில் தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த கருத்தை தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு டிஒய் சந்திரசூட் தெரிவித்த இந்த யோசனையைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மேலும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்காக செயலாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார். அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை ஆகும். இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும்; இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. அவை நமது கலாச்சார உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. தாய்மொழியில் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பை வழங்குவது உட்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை வரவேற்றிருந்தனர். மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாவதை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் உயர்நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் இருக்க வேண்டும் என கூறியிருந்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நாட்டில் தற்போது சட்டங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இதனை 99% மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை. மாநிலங்களின் மக்கள் தாங்கள் என்ன மொழியில் பேசுகிறார்களோ அந்த மொழியில் சட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 மொழிகளில் முதல் கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட உள்ளது. இதற்காக நீதிபதி ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.ஐ.டி. தர்மிஸ்தா, டெல்லி ஐ.ஐ.டி. மித்தேஷ் கப்தா, ஏக்.ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், சுப்ரியா சங்கரன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று, நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள், தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் நாளை வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.