அடே! ஓடுனா மட்டும் விட்ருவோமா.. 3 கி.மீ. விரட்டியடித்த காண்டாமிருகம்.. மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்!
டெல்லி: அசாம் காசிரங்கா தேசிய பூங்காவில் ஜீப்பில் சஃபாரி சென்ற சுற்றுலாப்பயணிகளை காண்டா மிருகம் விரட்டியடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 3 கி.மீட்டர் தொலைவிற்கு பின் தொடர்ந்து விரட்டியதால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் அடைந்து..வாகனத்தை வேகமாக ஓட்டுமாறு சத்தம் போட்டுக்கொண்டு திகில் பயணத்தை தொடர்ந்து இருக்கின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அசாம். இந்த மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியை ஒட்டிய பகுதியில் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது.
சுமார் ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தேசிய பூங்காவில் புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்.. தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க.. ஆதார் ஆணையம் மக்களுக்கு வார்னிங்
காசிரங்கா தேசிய பூங்கா
இந்திய வகை காண்டா மிருகங்களின் இல்லம் என்றும் இந்த தேசிய பூங்கா அழைக்கப்படுகிறது. இந்த பூங்காவிற்குள் சுற்றுலாப்பயணிகள் ஜீப் மூலம் சஃபாரி சென்று வன விலங்குகளை ரசிப்பதுண்டு. வன விலங்குகளை அருகில் இருந்து பார்க்கும் மெய்சிலிர்க்கும் அனுபவம் கிடைக்கும் என்பதால் சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்பும் இடங்களில் ஒன்றாக இந்த அசாம் வன விலங்கு உள்ளது.
3 கி.மீ தூரம் விரட்டிய காண்டாமிருகம்
இந்த நிலையில், இந்த பூங்காவிற்குள் ஜீப்பில் சஃபாரி போன்ற போது காண்டா மிருகம் ஒன்று சுற்றுலாப்பயணிகளை ஓட ஓட விரட்டியடித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. அதுவும் சிறிது தூரம் அல்ல.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. மூன்று கிலோ மீட்டர்கள் இப்படி ஓட ஓட விரட்டியடித்துள்ளது அந்த காண்டா மிருகம். காண்டா மிருகம் விரட்டியதால் பீதி அடைந்த சுற்றுலாப்பயணிகள், ஜீப்பை வேகமாக ஓட்டுமாறு சத்தம் போடும் காட்சிகளும் கேட்கின்றன.
மிரண்டு போன சுற்றுலா பயணிகள்
ஜீப்பில் இருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் தனது செல்போன் கேமராவில் இந்தக் காட்சிகளை படம் பிடித்துள்ளார். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து விடாமல் காண்டாமிருகம் விரட்டிக்கொண்டு வருவதால் ஜீப்பில் இருந்த சுற்றுலா பயணிகள் மிரண்டு போயினர். மொத்தம் 3 ஜீப்களில் கடைசி ஜீப்பினை காண்டாமிருகம் விடாமல் விரட்டியதால் அந்த ஜீப்பில் இருந்தவர்கள் மிகவும் பதற்றமடைந்தனர்.
ஏற்கனவே பல முறை
இதுபோன்று சுற்றுலாப்பயணிகளை காண்டா மிருகங்கள் துரத்தும் வீடியோக்கள் வெளியாவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அசாமில் உள்ள மனாசு தேசிய வனவிலங்கு பூங்காவிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. ஹபாரி வனப்பகுதி வழியாக சென்ற சுற்றுலாப்பயணிகளின் ஜீப்பை, அங்கு இருந்த புதர்களுக்குள் மறைந்து இருந்த காண்டா மிருகம் ஒன்று தீடிரென துரத்த தொடங்கியது.
மனிதர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்
இதனால் பீதியில் சுற்றுலாப்பயணிகள் உறைந்து போகினர். இது தொடர்பான திக் திக் காட்சிகளும் இணையத்தில் அண்மையில் பரவியிருந்தது. வனப்பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அசவுகரியமாக உணரும் வனவிலங்குகள் இது போன்று மனிதர்களை துரத்துவதற்கான காரணம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதிகளவில் காண்டாமிருகங்கள்
காசிரங்கா வனவிலங்குகள் தேசிய பூங்கா காண்டாமிருகங்களின் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பூங்காவில் மட்டும் 2,613 காண்டா மிருகங்கள் வசிக்கின்றன. இயற்கை காரணங்களால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 400 காண்டா மிருகங்கள் உயிரிழந்ததாக தரவுகள் கூறினாலும், கண்டா மிருகங்கள் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது 400 காண்டா மிருகங்கள் உயிரிழந்தாலும் மொத்த எண்ணிக்கையில் 200 காண்டாமிருகங்கள் உயர்ந்துள்ளன.