உங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.. சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவை அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்!
நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது நிரூபிக்கப்பட்டால் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது மட்டும் நிரூபிக்கப்பட்டால் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருக்கிறது.
சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வெர்மா பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு கமிட்டியால் சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டார். அப்போது, சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இவர் இடைக்கால இயக்குனராக இருந்த சமயத்தில் பல சிபிஐ அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தார். அந்த வகையில் பீகாரில் குழந்தைகள் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரியையும் இடமாற்றம் செய்தார்.
பீகார் வழக்கு
பீகாரில் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை சிலர் கொடூரமாக வன்புணர்வு செய்ததாக வழக்கு இருக்கிறது. இதில் சில பாஜகவினருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை பணியிட மாற்றம் செய்ய கூடாது என்று பாட்னா ஹைகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.
ஆனால்
ஆனால் கடந்த ஜனவரி 17ம் தேதி நாகேஸ்வர ராவ், சர்மாவை சிபிஐ அமைப்பில் இருந்து இட மாற்றம் செய்தார். சிஆர்பிஎஃப் துறைக்கு இவர் மாற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த பணியிட மாற்றத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில்தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு மிக கோபமான கேள்விகளை கேட்டு இருக்கிறது.
என்ன கேட்டனர்
இதில் இன்று உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், நாகேஸ்வர ராவ் வரும் 12ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி இதில் விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை அந்த விளக்கம் எங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றாலோ, நீதிமன்றத்தின் உத்தரவில் நாகேஸ்வர ராவ் விளையாடியது தெரிந்து இருந்தாலோ...நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.. கடவுள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும், என்று கோபமாக கூறி உள்ளனர்.
அதிகாரிகளையும்
அதேபோல் இந்த பணியிட மாற்றத்திற்காக பணியாற்றிய சிபிஐ அதிகாரிகளையும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். எத்தனை பேர் இதற்கு பின்பு இருந்தாலும் அவர்கள் இதில் ஆஜராக வேண்டும். எல்லோரும் தனித்தனியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.