'அந்த சாலை' தான் காரணம்.. அடுத்தடுத்து இந்தியாவுக்கு எதிராக திரும்பிய நேபாளம்.. பரபர பின்னணி
டெல்லி: கொரோனா வைரஸை விட இந்திய வைரஸ் ஆபத்தானது என்று நேபாள பிரதமர் ஒலி பேசியதில் இருந்து இந்தியா நேபாளம் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்திய பகுதிகளை தன் பகுதியாக சேர்த்து மேப் வெளியிடும் அளவுக்கு நேபாளம் போக என்ன காரணம் என்று பார்த்தால் அதன் பின்னணில் சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.
இந்தியாவின் வழியே பரவும் வைரஸ் சீனா மற்றும் இத்தாலிய கொரோனா வைரஸை விட அபாயகரமானது. இந்திய வைரஸால்தான் நேபாளத்தில், அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர், என்று, நேபாள பிரதமர், கே.பி.சர்மா ஒலி சர்ச்சைக்குரிய கருத்தை கடந்த மாதம் தெரிவித்தார்.
இப்படி பேச காரணம், கடந்த மாதம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் 80 கிலோ மீட்டர் எல்லையோர சாலையை திறந்து வைத்தது தான்.
இந்திய எல்லைகளை இணைத்து வரைபடம்..நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்..இந்தியா கடும் கண்டனம்
பிரச்சனை ஆரம்பம்
சீனா ஒரு பக்கம் கோபப்பட்டது என்றால் நேபாளமும் அது தங்கள் பகுதி என்று திடீரென கோபத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானவை என்றும் இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும் பிரச்சனை செய்தார் பிரதமர், கே.பி.சர்மா ஒலி.
சீனா எரிச்சல்
இத்தனைக்கும் நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி இந்திய ஆதரவாளர் என்றும்,இந்தியாவின் ஏஜெண்ட் என்றும் அந்நாட்டு எதிர்க்கட்சிகளால் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். எல்லையில் இந்திய சாலைகள் அமைக்கும்பணியை துரிதப்படுத்தியதால் எரிச்சல் அடைந்த சீனா, நேபாளத்தை தூண்டிடுவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடல்வழி போக்குவரத்து
பிரதமர் கேபி சர்மா ஒலி பிரதமர் ஆன பின்னர் சீனா மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனா கடல்வழி போக்குவரத்து சாலைவழி போக்குவரத்தை நேபாளத்திற்கு வழங்கி அதை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இந்த சூழலில் லிபுலேக் கணவாய்க்கு இந்தியா சாலைஅமைத்ததால் சீனாவுடன் நேபாளமும் பிரச்சனையை ஆரம்பித்துள்ளது. இதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்படுகிறது.
காளி நதி எல்லை
இந்நிலையில் இந்திய - நேபாள எல்லையாக இல்லாத காளி நதியை, இந்தியா வரையறுத்துள்ளதாகவும், அங்கு தனது ராணுவ படைகளை நிலைநிறுத்தியுள்ளதாக, நேபாள பிரதமர் கே பி சர்மா ஒலி அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசினார். அத்துடன் நேபாள நாட்டின் பகுதிகளான காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாகவும், அப்பகுதிகளை இந்தியா சொந்தம் கொண்டாடி அந்நாட்டு வரைபடத்தில் இணைத்துள்ளதாகவும் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறினார்.
தேசிய வாத கொள்கை
அத்துடன் இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை கேலி செய்தார். கேபி சர்மா ஒலியின் தேசிய வாத கொள்கை நடவடிக்கை இந்தியாவிற்கு எதிராக மாறி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கேபி சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிச அரசு அமைந்த பின்னர் பல மாற்றங்கள் இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தில் உருவாகி உள்ளது. இந்தியாவின் கொள்கையை அப்படியே பின்பற்றும் நாடாக இருந்த நேபாளம் முற்றிலும் இப்போது மாறி உள்ளது.
சிக்கல் அதிகரிப்பு
அதன் தொடர்ச்சியாகவே நேபாள அரசு புதிய வரைபடத்தை அண்மையில் வெளியிட்டது. இந்த வரைப்படத்தில் இந்திய பகுதிகளான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை இணைக்கப்பட்டு இருந்தது, இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி தற்போது, நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணில் சீனா நிச்சயம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக திரும்பி வருவது எல்லை பிரச்சனையில் சிக்கலை அதிகரிக்கும் என்பதில் சந்தேமே இல்லை. இந்தியா எப்படி ராஜதந்திரமாக கையாளப்போகிறது என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.