தமிழகம் இரண்டாக பிரிக்கப்பட்டால்.. அங்கேயும் திமுக ஆட்சிதான்.. ஐ.பெரியசாமி அதிரடி!
திண்டுக்கல்: தமிழகத்தை இரண்டாகப் பிரித்தாலும், இரண்டிலும் திமுகதான் ஆட்சி செய்யும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று பேசி வரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் கருத்து ராமதாஸ் கருத்துக்கு வலுசேர்த்துள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி - ஐ.பெரியசாமி
புதிய கல்லூரி விழா
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியிலுள்ள கன்னிவாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது. இதனையொட்டி கன்னிவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் ஏற்று மிகவும் பின்தங்கிய பகுதியில் அரசு கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார்.
ஐ.பெரியசாமி பேச்சு
மிகவும் பின்தங்கிய பகுதியான ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரத்தில் ஒரு கல்லூரி வருவதென்பது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி வருவது கனவாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு நம்முடைய மாவட்டத்திற்கு நம்முடைய ஆத்தூர் தொகுதியில் ஒரு கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் அரசு கல்லூரி வேண்டும் என்று கேட்டதன் பேரில் அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி கோரிக்கை
முன்னாள் முதல்வர் கலைஞர் நமக்கு மருத்துவ கல்லூரியை தந்ததுபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை வழங்குவார். அனைவரும் பயன்பெறும் வகையில் வருங்காலத்தில் மருத்துவக் கல்லூரி புதிதாக கிடைக்கும்.
Recommended Video
திமுக ஆட்சி
இதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது நயினார் நாகேந்திரனின் ஆசையாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்தாலும் திமுகதான் இரண்டிலும் ஆட்சி செய்யும் என்று தெரிவித்தார்.