எங்கடா இங்க இருந்த ப்ளைட்டை காணோம்! விமானத்திற்கு ஆசையாக டிக்கெட் புக் செய்து.. ஏமாந்த பயணிகள்
ஹைதராபாத்: தெலங்கானாவின் ஹைதராபாத்திலிருந்து டெல்லி செல்ல பயணிகள் சிலர் 'Go First' எனும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் விமான நிலையம் வந்தபோது அப்படி ஒரு விமானமே கிடையாது என ஊழியர்கள் கூறியதை கேட்டு பயணிகள் ஷாக் ஆகியுள்ளனர்.
இந்த பயணிகளை சிஐஎஸ்எஃப் வீரர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து விமான நிலையத்திலேயே கடும் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது. இல்லாத விமானத்திற்கு டிக்கெட் எப்படி புக் ஆனது என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மர்ம விமானம்
ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட பயணிகள் சிலர் வந்துள்ளனர். அவர்களிடம் டிக்கெட்டுகள் இருந்திருக்கின்றன. ஆனால் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இந்த பயணிகளை விமான நிலையத்திற்குள்ளேயே அனுமதிக்கவில்லை. காரணம் கேட்ட பயணிகள் ஷாக் ஆகியிருந்திருக்கிறார்கள். அதாவது இவர்கள் முன்பதிவு செய்த 'Go First' எனும் பெயரில் எந்த விமானமும் இன்று பட்டியலில் இல்லையென்று வீரர்கள் கூறியுள்ளனர். ஒருவர் இருவர் எனில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிக்கெட் தவறாக பதிவாகியிருக்கலாம். ஆனால் ஒரு விமானத்தில் பணிக்க இருந்த மொத்த பயணிகளுக்கும் இதே பிரச்னை எப்படி வரும்? என்று பயணிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

புகார்
இது தொடர்பாக பயணிகள் சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் விசாரிக்கப்பட்டபோது, இந்த விமான நிறுவனம் ஹைதராபாத்-டெல்லி இடையேயான சேவையை ஒரு மாதத்திற்கு முன்னரே ரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளது. சேவை ரத்து செய்யப்பட்ட விமானத்திற்கு எப்படி டிக்கெட் புக் செய்ய முடியும் என்றும்? டிக்கெட் புக்கிங் போர்டல் ஏன் செயல்பட்டது? என்றும் பயணிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

நாட் ரீச்சபிள்
இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது அசாமின் 'ஹேப்பி ஃபேர்ஸ்' என்ற ஆன்லைன் போர்ட்டல்தான் என்றும் அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து 'ஹேப்பி ஃபேர்ஸ்' அலுவலகத்திற்கு போன் செய்தால் முதல் முறை மட்டுமே போன் எடுக்கப்பட்டது என்றும் அப்போதும் முறையான விளக்கம் சொல்லாமல் கால் கட்டாகிவிட்டதாவும் பயணிகள் கூறியுள்ளனர். திரும்ப அழைத்தால் யாரும் போன் எடுக்காததால் டிக்கெட்டில் இருந்த நம்பருக்கு பயணிகள் அழைத்திருக்கிறார்கள் அப்போதும் யாரும் போன் எடுக்கவில்லை.

விளக்கம்
இதனையடுத்து தனியார் செய்தி ஊடகம் சார்பில் டிக்கெட்டில் உள்ள நம்பருக்கு அழைத்து பேசியபோது, "விமான சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மெயில் வந்திருந்தது. நாங்கள் அதை கவனிக்காமல் டிக்கெட் புக்கிங் போர்ட்டலை திறந்து வைத்திருந்திருக்கிறோம்" என்று GoFlySmart இன் உரிமையாளர் அங்கித் அகர்வால் கூறியுள்ளார். இவர் Go First விமான நிறுவனத்தின் துணை ஏஜென்ட். இவர்தான் டிக்கெட்டுகளை நிறுவனத்திடமிருந்து பெற்று 'ஹேப்பி ஃபேர்ஸ்' என்ற ஆன்லைன் போர்ட்டலுக்கு கொடுக்கிறார். எப்படி இருப்பினும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான தொகையை திரும்ப கொடுப்பது குறித்து எந்த விவரத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இல்லாத விமானத்திற்கு டிக்கெட் புக் செய்து பயணிகள் ஏமாந்துள்ள சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications