ஜம்மு காஷ்மீரில் கனமழை: ரஜோரி மாவட்டத்தில் வீடு இடிந்து 10 பேர் பலி
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கனமழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் நீர் அளவு அபாய நிலையைத் தாண்டி உள்ளதால் பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
நேற்று திருமண கோஷ்டியினர் சென்ற பேருந்து வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணம் செய்த 50 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. தேசிய பேரிடர் மீட்புக் குழுவால், தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் உள்ள தானா மண்டியில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஒரு வீடு ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 10 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிலச்சரிவில் மாயமான பலரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இதேபோல் சுந்தர்பனி, தர்ஹால் பகுதிகளில் தலா ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.