பெங்களூரில் குவியும் அதிமுகவினர்- பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி மீண்டும் 144 தடை உத்தரவு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படும்போது அவரை வரவேற்க ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம். என் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் தகவலில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் அளித்துள்ளது. பெருமளவிலானோர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அருகே கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறையைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போதுமான போலீஸாரும் குவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும் மற்றவர்களும் பீதி அடையத் தேவையில்லை. அனைவரும் எந்தவிதமான வதந்திக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று காவல்துறை கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார் ரெட்டி.