அட பாவமே.. சோகத்தை பாருங்க.. அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு!
கவுகாத்தி: அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் பர்ஹாம்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பமுனி வனப்பகுதியில் 18 காட்டு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.கால்நடைத்துறை அதிகாரிகளும் விரைந்தனர்.

மலைகள் நிறைந்த வனப்பகுதி என்பதால் மலையடிவாரத்தின் கீழ் நான்கு யானைகளும், மலையின் மேல் பகுதியில் 14 யானைகளும் இறந்து கிடந்தன. யானைகள் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் மின்னல் தாக்கியதால் இந்த யானைகள் உயிரிழந்துள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் கூறினார்கள். அசாமில் மின்னல் தாக்கி யானைகள் மொத்தமாக உயிரிழப்பது இதுவே முதல் முறை என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
உயிரிழந்த யானைகளுக்கு நாளை பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன்பிறகே யானைகள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும். இது தொடர்பாக யானை ஆராய்ச்சி நிபுணர் விஜயானந்த சவுத்ரி கூறுகையில், ' பிரேத பரிசோதனை அறிக்கை யானைகளின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தும். இருப்பினும் மின்னல் தாக்கி யானைகள் இறந்ததாக தெரியவில்லை. யானைகளின் மரணதுக்கு விஷமும் காரணமாக இருக்கலாம்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications