கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் விறுவிறுப்பு- 75% வாக்குகள் பதிவு!!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 4.30 மணிவரை சுமார் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கொல்லம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் 31,161 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 1,11,11,006 வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய பிரதான கட்சிகளுடன் ஈழவா சமூகத்தின் எஸ்.என்.டி.பி.- பா.ஜ.க. கூட்டணியும் களமிறங்கியுள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 4.30 வரை சுமார் 75% வாக்குகள் பதிவாகி இருந்தன.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிணராய் விஜயன் கண்ணூரில் வாக்களித்தார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் முள்ளபள்ளி ராமச்சந்திரன், ஓ ராஜகோபால் ஆகியோரும் இன்றைய தேர்தலில் வாக்களித்தனர்.
முன்னதாக இன்று அதிகாலை கொல்லம் பஞ்சாயத்து இடதுசாரி வேட்பாளர் ஜெரோம் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 38,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு நவம்பர் 5-ந் தேதி 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 7-ந் தேதி நடக்கிறது.