போன வருஷம் 14... இந்த வருஷம் 20... அடேங்கப்பா கோல்டன் பாபா!
20 கிலோ தங்க நகைகள், 21 சொகுசு கார்கள், பாதுகாப்புக்கு பவுன்சர்கள் குழு என பரபரப்பாக வலம் வருகிறார் கோல்டன் பாபா.
காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கோல்டன் பாபா தனது உடல் முழுவதும் 20 கிலோ நகைகள், 21 சொகுசு கார்கள், பாதுகாப்புக்கு பவுன்சர்கள் குழு என பரபரப்பாக வலம் வருகிறார்.
காசியாபாத்தில் உள்ளவர் சுதீர் மக்கார் என்கிற கோல்டன் பாபா. இவர் கன்வர் யாத்திரையில் ஆண்டுதோறும் கலந்து கொள்வது வழக்கம். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவர், காவ்முக், கங்கோத்ரி, பீகாரில் உள்ள சுல்தான்கஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து கங்கை நீரை எடுத்து வரும் நிகழ்ச்சி கன்வர் யாத்திரையாகும்.
இந்த யாத்திரையில் கலந்து கொள்வதற்காக டெல்லி- மீரட் சாலையில் உள்ள ரிசார்ட்டில் கோல்டன் பாபா (58) தங்கியிருந்தார். அவர் 20 கிலோ தங்க நகைகள், 21 சொகுசு கார்கள், பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீஸார், பவுன்சர்கள் குழு என வலம் வந்தார்.
வயிற்று வலி
இதுகுறித்து கோல்டன் பாபா கூறுகையில் கடவுளின் கிருபையால் என்னிடம் உள்ள தங்கம் அதிகரித்து வருகிறது. எனது உடல்நிலை ஒத்துழைத்தால் இந்த யாத்திரையை நான் தொடர்வேன். எனக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி உள்ளது.
14 கிலோ
மும்பையில் உள்ள மருத்துவமனை உள்பட ஏராளமான சிறந்த மருத்துவமனைகளில் காண்பித்து விட்டேன். என் பிரச்சினை தீரவில்லை. கடந்த ஆண்டு நான் 14 கிலோ நகை அணிந்து வந்தேன். இந்த ஆண்டு 20 கிலோ தங்கம் அணிந்துள்ளேன்.
பிரசாதம்
ஆண்டுதோறும் யாத்திரைக்கான செலவு அதிகரித்து வருகிறது. என்னுடைய முதல் யாத்திரைக்கு நான் செய்த செலவு ரூ. 250 ஆகும். இதை நான் நன்கு நினைவில் வைத்துள்ளேன். டெண்டுகளில் தங்கியிருந்ததையும் சாலையோரத்தில் பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதத்தையும் உண்டு வந்தேன்.
ரூ.1.25 கோடி செலவு
தங்கம் மற்றும் கார்களின் மீதான எனது அன்பு எப்போதும் இறக்காது. நான் இறக்கும் முன்பு என்னுடைய தங்கத்தை எனக்கு பிடித்த சிஷ்யரிடம் கொடுத்து விட்டுதான் செல்வேன் என்று தெரிவித்தார் கோல்டன் பாபா . கடந்த ஆண்டு யாத்திரைக்கு கார்களையும் வாடகைக்கு எடுப்பது, டெல்லியிலிருந்து சிறந்த உணவு கலைஞரை வரவழைத்தது, தண்ணீர் புகாத டெண்டுகளை போட்டது, மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் என ரூ.1 . 25 கோடி செலவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.