வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்த 3,000 பேருக்கு நோட்டீஸ் !
வங்கி கணக்கில் அதிக பணம் டெபாசிட் செய்த 3,000 பேருக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்த 3,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் 291 பேரிடம் இருந்து கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நவம்பர் 8ம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழைய நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் வரும் 30ம் தேதி வரை டெபாசிட் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நவம்பர் 9ம் தேதி முதல் வங்கிகளில் செலுத்தப்படும் டெபாசிட் குறித்த விவரங்களை மத்திய அரசு தீவிரமாக கண்கானித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கி கணக்கில் அதிக பணம் செலுத்திய 3,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 291 பேரிடம் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டோர்மண்ட்( செயல்படாத வங்கி கணக்கு), ஜன் தன் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது..
291 இடங்களில் நடத்திய சோதனையில் தற்போது வரை 316 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் 80 கோடிக்கும் மேல் புதிய ரூபாய் நோட்டுக்கள். 76 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.