உத்தராகண்டில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமலாகும்: முதல்வர் வாக்குறுதி
டேராடூன்: உத்தரகாண்டில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததும், மாநிலம் முழுவதும் ஒரே சட்டம் கொண்டுவரப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வரும் 14ல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியமைக்க போட்டியிட்டு வருகின்றன.
முதல்வர் நேரில் வராமல் காணொளியில் பிரச்சாரம் செய்ய இதுதான் காரணமாம்.. சொல்கிறார் பாஜக அண்ணாமலை
சிவில் சட்டம்
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ''உத்தரகாண்ட் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்புக்குப் பிறகு புதிய பாஜக அரசு, மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தின் வரைவைத் தயாரிப்பதற்கு ஒரு குழுவை அமைக்கும். திருமணங்கள், விவாகரத்து, நிலம் - சொத்து மற்றும் அனைத்து மக்களுக்கும் அவர்களின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியான சட்டங்களை வழங்கும்'' என்று தெரிவித்திருக்கிறார்.
உத்தரகாண்ட்
மீண்டும் வெற்றி பெற பாஜகவும், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன. உத்தரபிரதேசத்தைவிட, உத்தரகாண்டில்தான் காங்கிரஸ் பாஜகவுக்கு நேரடி போட்டி நிலவி வருகிறது.
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், 2017ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 57 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்தது.
பாஜக
உத்தரகாண்டில் பல கட்சி போட்டி நிலவுகிறது. பாஜக மீது உத்தரகாண்ட் மக்களுக்கு அதிருப்திகள் உள்ளன. வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல்கள், ஹரித்வார் கொரோனா பிரச்சனை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளை பாஜக சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாஜக பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. விஜய் சங்கல்ப் சபா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்தும் பிரதமர் உத்தரகாண்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி
''இது உத்தரகாண்ட் மாநிலத்துக்கான யுகம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது. அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மார்ச் 10-ந் தேதிக்கு பின் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் அமையும். உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாத்துறையை நாங்கள் மேலும் மேம்படுத்துவோம். சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்'' என நேற்று நடந்த உத்தரகாண்ட் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியுள்ளார்.