எய்ம்ஸ் மருத்துவமனையில் லைவ் ஆக ஒளிபரப்பான ஆபரேஷன்.. நோயாளி உயிரிழந்ததால் சலசலப்பு
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில், சம்பந்தப்பட்ட நோயாளி அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் ஷோபா ராம். கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சம்பந்தபட்ட நோய்களால் அவதிப்பட்டுவந்த இவருக்கு, கடந்த 31-ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவைச் சிகிச்சை ஜப்பானில் உள்ள புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் தடுப்புமையத்தின் மருத்துவர் கோரோ ஹோண்டா என்பவரின் தலைமையில் இந்திய மருத்துவர்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் நேரடியாக பார்த்தனர்.
ஆபரேஷன் தொடங்கிய நான்கு மணி நேரங்களிலேயே ஹோபா ராமின் உடல்நிலை மோசமான கூறப்படுகிறது. எனவே, இந்திய மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக லேப்ரோஸ்கோபிக் அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக நேரடி அறுவைச் சிகிக்சை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இதனை ஏற்க ஜப்பான் மருத்துவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் கடைசி நேரத்தில் ஷோபா ராமிற்கு லேப்ரோயைஸ்கோபிக் முறை மாற்றி சாதாரண முறையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள்ளாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.
இந்த அறுவைச் சிகிச்சையின் போது ஷோபா ராமின் உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனால், ஆபரேஷன் முடிந்த அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்குள் ஷோபா ராம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "ஷோபாராமின் அறுவை சிகிச்சை நடைபெற்ற போது அவரது உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இரத்தப் போக்கை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்து அவரை அவசர சிகிச்சை பகுதிக்கு மாற்றினோம். ஆனால் அவரது கல்லீரல் முழுமையாக பாதிப்படைந்ததால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிர் இழந்துவிட்டார்'' எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே ஷோபா ராம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த அறுவைச் சிகிச்சை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது கருத்தரங்கம் ஒன்றிற்காக என கூறப்படுகிறது. எய்ம்ஸ் மற்றும் ராணுவ ஆய்வு மற்றும் ரிபரல் மருத்துவமனையும் இணைந்து நடத்திய 23வது இந்திய அசோசியேசன்ஸ் பார் ஸ்டடி ஆப் தி லிவர் என்ற கருத்தரங்கிற்காக ஷோபா ராமின் சிக்கலான அறுவைச் சிகிச்சை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதே போன்ற சம்பவம் கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இவ்வாறு நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதை நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என அங்கு தடை விதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.