உ.பி சகோதரிகள் கொலை- கௌரவக் கொலை...? - சிபிஐ சந்தேகம்
படான்: உத்திரப்பிரதேசத்தில் படான் என்ற கிராமத்தில் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கௌரவக் கொலையாக இருக்கலாம் என சிபிஐ தரப்பு சந்தேகிக்கிறது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள படான் என்ற கிராமத்தில் கடந்த மே மாதம் 27ம் தேதி இரவு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக தனியே சென்ற சகோதரிகள் இருவரை மர்ம கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய இந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சிபிஐ விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரு சிறுமிகளின் குடும்பத்தாரிடம் கடந்த வியாழனன்று உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
அதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. எனவே, இந்தப் படுகொலை சம்பவம் கௌரவக் கொலையாக இருக்கலாம் என சிபிஐ தரப்பு சந்தேகிக்கிறதாம்.
விரைவில் இரு சிறுமிகளின் குடும்பத்தாரையும் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாம். அடுத்த வாரம் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை சகோதரர்களான பப்பு யாதவ், அவதேஷ் யாதவ், ஊர்வேஷ் யாதவ் மற்றும் போலீஸார் சத்ரபால் யாதவ், சர்வேஷ யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.