கர்நாடகாவில் மாட்டிறைச்சிக்கு எதிராக போராடிய பஜ்ரங்தள் நிர்வாகி கொலை, சாட்சி தற்கொலை! 8 பேர் கைது
பெங்களூர்: பசுவதைக்கு எதிராக முனைப்பு காட்டிய பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள மூடுபித்ரியில் கொலை செய்யப்பட்டிருந்தார். அக்கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பசுமாடுகள் வெட்டப்படுகின்றன. கேரளாவுக்கு அவை கடத்தப்படுகின்றன. இதை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தவர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பிரசாந்த் பூஜாரி (29). இவர் கடந்த 9ம் தேதி பைக்கில் வந்த ஒரு கும்பலால் மூடுபித்ரி பகுதியில், வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சட்டவிரோத மாட்டிறைச்சி கூடங்களுக்கு எதிராக பிரசாந்த் செயல்பட்டு வந்ததுதான் கொலைக்கு காரணம் என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இருப்பினும் குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. இதனிடையே வழக்கின் சாட்சியமாக இருந்த வாமன் பூஜாரி என்பவர், சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த திருப்பங்கள் மாநிலத்தில் அதிர்ச்சியை உருவாக்கின. குற்றவாளிகளை ஆளும் காங்கிரஸ் கட்சி பாதுகாப்பதாகவும், ஊடகங்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்வதாகவும், அக்டோபர் 19ம் தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் இந்துக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜக அறிவித்தது.
இந்நிலையில், முகமது ஷெரிப், முஸ்தபா கவூர், முகமது முஸ்தபா, கபீர், முகமது ஹனீப், முகமது இலியாஸ், இப்ராகிம் லியாகத் மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய, 8 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை மங்களூர் போலீஸ் கமிஷனர் எஸ்.முருகன் உறுதி செய்தார். பிரசாந்த் கொலை மட்டுமின்றி, சட்டவிரோத கால்நடை கடத்தலிலும் இக்கும்பலுக்கு தொடர்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாட்டுக்கறி சாப்பிட்டதாக உ.பி மாநிலம் தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் கொலையான நிலையில், பசுவதையை தடுத்ததற்காக பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர் கர்நாடக மாநிலம் மூடுபித்ரியில் கொலையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு கொலைகளையுமே உடுப்பி பெஜாவர் பீடாதிபதி கண்டித்துள்ளார்.