என்னை கொன்றாலும் மறுபிறவி எடுப்பேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்
கொல்கத்தா: என்னை கொல்ல சதி நடக்கிறது, அப்படியே கொன்றாலும் மக்கள் மத்தியில் மறுபிறவி எடுப்பேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு இடையில் வியாழக்கிழமையன்று மாலை மால்டா நகரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரது அறையில் இருந்த ஏ.சி.யில் இருந்து புகை வெளியேறி திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
இதனால் புகை மூட்டத்தில் சிக்கிய மம்தா பானர்ஜியை அவரது உதவியாளர்கள் பத்திரமாக மீட்டனர். மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.
மின் கசிவு விபத்து
இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் பிர்பும் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா, எனது ஓட்டல் அறையில் மின்சார கசிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. இது என்னை கொலை செய்ய நடந்த சதி. இது போன்றவர்களுக்கு வங்காளத்துக்கு நல்லது செய்தால் பிடிக்காது. என்னை கொலை செய்து விட்டு, மின்கசிவு காரணமாக விபத்தில் நான் இறந்ததாக நாடகமாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தேர்தல் போர்களம்
அப்படியே என் மீது தாக்குதல் நடந்தாலும், என்னை கொலை செய்தாலும், நான் மக்கள் மத்தியில் மீண்டும் மறுபிறவி எடுப்பேன். நான் இந்த மக்களுக்காக பணியாற்றுவதை உங்களால் தடுக்க முடியாது. நான் புகைமூட்டத்தில் சிக்கியதால் நேற்றிரவு எனக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. குளுக்கோசும் ஏற்றப்பட்டது.
இது தேர்தல் நேரம். எனவே எனது பிரசாரத்தை என்னால் ரத்து செய்ய முடியாது. டாக்டர்கள் ஓய்வு எடுக்கத்தான் சொல்வார்கள். ஆனால் அதை நான் கேட்க முடியுமா?'' என்றார்.
தேர்தல் ஆணையம்
இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் செயலாளர் முகுல்ராய் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எங்கள் கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேர்தல் கமிஷன் தவறிவிட்டது. பாதுகாப்பு விதிமுறைகளும், நடவடிக்கைகளும் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் தங்களின் அவமதிப்பான நிர்வாக போக்கையே காட்டுகிறது.
சதிவேலை
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருந்தால், அதன் காரணமாக மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் மிகவும் மோசமான விளைவுகள் எதிரொலித்து இருக்கும். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவேலை இருக்கலாம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஏ.சி.யில் இருந்து வெளிப்பட்ட கெடுதலான புகையால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
தடயஅறிவியல் சோதனை
இதனிடையே, மம்தா பானர்ஜி தங்கியிருந்த அறைக்கு தடய அறிவியல் துறையினர் சென்று அங்கு எவ்வாறு தீப்பிடித்தது என்பது பற்றிய விசாரணையை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அமைச்சரும், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருமான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கேட்டுக் கொண்டார்.