பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு: கையை பிசையும் மக்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் பெங்களூர்வாசிகளுக்கு கார்பரேஷன் தண்ணீர் வாரத்திற்கு மூன்று முறைக்கு பதில் ஒரு முறை மட்டுமே அளிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் போதிய மழை பெய்யாததால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கேஆர்எஸ் நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 85 அடியாக கடந்த வாரம் குறைந்தது.
அந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இப்படியே சென்றால் அடுத்த 2 வாரங்களில் நீரின் அளவு 50 அடியாக குறைந்துவிடும். மழை பெய்தால் மட்டுமே இந்த பிரச்சனையை தவிர்க்க முடியும்.

பெங்களூர்
நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு வேகமாக குறைந்து வருவதால் பெங்களூரும் பாதிக்கப்படும். தற்போது பெங்களூரில் கார்பரேஷன் தண்ணீர் வாரத்தில் மூன்று முறை வினியோகிக்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் பிரச்சனை தொடர்ந்தால் இனி வாரத்தில் ஒரு முறை தான் கார்பரேஷன் நீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.

மழை
மழை பெய்தாலோ அல்லது பருவமழை காலம் முன்கூட்டியே துவங்கினாலோ தான் இந்த தண்ணீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியும். பருவமழை காலம் துவங்கும் வரை பெங்களூர்வாசிகளுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே நீர் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பருவமழை காலம் மே மாத நடுவில் துவங்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீர்
பெங்களூர் நகருக்கு தினமும் 900 மில்லியன் லிட்டர் நீரை மாநகராட்சி வழங்கி வருகிறது. ஆனால் பெங்களூர் நகரின் தினசரி நீர் தேவை 1.3 பில்லியன் லிட்டர் ஆகும். இந்நிலையில் நீரின் அளவை மாநகராட்சி குறைத்தால் மக்கள் கடும் அவதிப்பட வேண்டி இருக்கும்.

காவிரி
பெங்களூருக்கு பல்வேறு வழிகளில் நீர் வருகிறது. பெங்களூர் நகரின் நீர் தேவையில் 80 சதவீதத்தை காவிரி ஆறு பூர்த்தி செய்கிறது. மேலும் அர்காவதி ஆற்றில் இருந்தும் நீர் பெறப்படுகிறது. ஆனால் அது நகரின் தேவையை 20 சதவீதம் தான் பூர்த்தி செய்கிறது.












Click it and Unblock the Notifications