காஷ்மீர் இந்தியாவிலேயே இல்லை... பகீர் கிளப்பும் பீகார் கல்வித்துறை!
காஷ்மீர் இந்தியாவிலேயே இல்லை, அது தனி நாடு என்ற வரி, பீகார் கல்வித் துறை தயாரித்த கேள்வித்தாள் ஒன்றில் இடம் பெற்றிருக்கிறது.
பாட்னா: காஷ்மீர் இந்தியாவிலேயே இல்லை, அது தனி நாடு என்ற வரி, பீகார் கல்வித் துறை தயாரித்த கேள்வித்தாள் ஒன்றில் இடம் பெற்றிருக்கிறது. இணையம் முழுவதும் பரப்பப்பட்ட அந்தக் கேள்வித்தாளின் புகைப்படம் தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்தப் பிரச்சனைக்கு பதில் சொல்ல முடியாமல் பீகார் கல்வித் துறை திணறி வருகிறது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. அதில் இருந்த ஒரு கேள்வி தற்போது இந்தியா முழுக்க வைரல் ஆகியுள்ளது. அந்தக் கேள்வித்தாளில் "காஷ்மீர் இந்தியாவில் இல்லை அது தனி நாடு" என்று பொருள் வரும்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அந்த கேள்வித்தாளில் ''கீழ்காணும் நாடுகளில் உள்ள மக்கள் எப்படி அழைக்கப்படுவார்கள்..?" என்று கேட்கப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான ஆப்ஷன்களில் இந்தியா, சீனா உடன் காஷ்மீர் மாநிலமும் இடம்பெற்றுள்ளது.
இந்த கேள்வி "'காஷ்மீர் என்பது மாநிலம் இல்லை, அது இந்தியாவில் இல்லை தனி நாடாக இருக்கிறது'' என்பது போல உருவாக்கப்பட்டிருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் நேற்றில் இருந்த இந்தக் கேள்வித்தாளின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்தக் கேள்வித்தாளை உருவாக்கியது , பீகார் மாநில கல்வித் துறையாகும். இப்படி ஒரு சர்ச்சையான கேள்வியை உருவாக்கி உள்ளதால் பலரும் அம்மாநில கல்வித் துறையின் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முதல் கட்ட விசாரணையை தொடங்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.