ரயில் டிக்கெட் புக்கிங் இப்போ ரொம்ப ஈசி.. வேகத்தை அதிகரித்தது ஐஆர்சிடிசி!
டெல்லி: ரயில் முன்பதிவு செய்யும் வேகத்தை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது ஐஆர்சிடிசி.
ஐஆர்சிடிசியில் தற்போது நிமிடத்துக்கு 7 ஆயிரத்து 200 டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். ஆனால், இணையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நிமிடத்துக்கு 14 ஆயிரம் டிக்கெட்டுகளை புக் செய்யும் வகையிலான இரு நவீன சர்வர்களை பொருத்தியுள்ளது ஐஆர்சிடிசி.
இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் டாக்டர் ஏ.கே.மனோசா கூறுகையில், நாட்டில் 54 சதவீத டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி வெப்சைட் வாயிலாக முன்பதிவு செய்யப்படுகிறது. 3 கோடி பதிவு செய்த வாடிக்கையாளர்கள் உள்னர். தினமும் 6 லட்சம் வரை டிக்கெட்டுகள் முன்பதிவாகின்றன.
2002ல் இ-டிக்கெட் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஆண்டு ஏப்ரலில் வேகம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இரட்டிப்பாக வேகம் கூட்டப்பட்டுள்ளது.