பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு ரூ.51 கோடி பரிசு அறிவித்த பி.எஸ்.பி எம்.எல்.ஏ
லக்னோ: பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.51 கோடி பரிசு அளிக்கப்படும் என்று முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.சர்ச்சைக்குறிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ள கேலிச்சித்திரங்களை வெளியிடும் வார இதழான சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் புகுந்து நேற்று தீவிரவாத கும்பலை சேர்ந்த 3 பேர் நடத்திய தாக்குதலில் அப்பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர்.
நபிகள் நாயகம் குறித்து கேலி சித்திரம் வெளியிட்டதாலேயே இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிக்கை வழக்கமாகவே எல்லா மதங்களையும் கிண்டல் செய்து செய்தி, கார்ட்டூன்கள் வெளியிட்டு வந்தது. முன்பு நபிகள் நாயகம் தொடர்பாக டென்மார்க் பத்திரிக்கையான Jyllands-Posten வெளியிட்ட கார்ட்டூனையடுத்து அந்த நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது. அந்த கார்ட்டூனை சில ஆண்டுகள் கழித்து 2006ல் சார்லி ஹெப்டோ வெளியிட்டது. அப்போது பிரான்சில் பெரும் போராட்டம் வெடித்தது.
இந் நிலையில் 2011ம் ஆண்டு இது நபிகள் நாயகத்தால் எடிட் செய்யப்பட்ட எடிசன் என்று கூறி இந்த பத்திரிக்கை தனது இதழை வெளியிட்டது. இதையடுத்து இதன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் கேலிச் சித்திரத்தை, இப் பத்திரிகை சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
சார்லி ஹெப்டோ பத்திரிகையின் ஆசிரியர் குழு கூட்டம் புதன்கிழமையன்று நடப்பதை அறிந்து அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த 3 தீவிரவாதிகள் கபு, ஜார்ஜ் ஒலின்ஸ்கி, பெர்னார்ட் வெல்ஹாக் உள்ளிட்ட 4 கார்ட்டூனிஸ்டுகளையும் பத்திரிகையின் பதிப்பாளர் ஸ்டீபன் சார்போனீரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் 5 ஊழியர்களையும் கொன்றுவிட்டு வெளியே வந்த அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது 2 போலீசாரையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பினர்.
இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு மீரட் தொகுதியில் இருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட ஹஜி யாக்கூப் குரேஷி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாரீஸ் நகர பத்திரிகை அலுவலகத்தை தாக்கியவர்களுக்கு 51 கோடி :ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹஜி யாக்கூப் குரேஷி ஏற்கெனவே டேனிஷ் நாட்டின் கார்டூனிஸ்ட் ஒருவரின் தலையைக் கொண்டு வருபவருக்கு இதே போல பணப் பரிசு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.