41 தொகுதிக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; மே 12ல் வாக்குப்பதிவு
வாரணாசி: நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 41 தொகுதிகளில், 9 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
வாரணாசி உள்பட உத்தரபிரதேசத்தில் 18, மேற்கு வங்கத்தில் 17, பீகாரில் 6 என மொத்தம் 41 தொகுதிகளில் 9-வது மற்றும் கடைசி கட்டமாக வரும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அந்த தொகுதிகளில் நடந்துவந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
41 தொகுதிகளிலும் மொத்தம் 606 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். வாரணாசியில் போட்டியிடும் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அன்றைய தேர்தலின் நட்சத்திர வேட்பாளர்கள்.
இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் 41 தொகுதிகளிலும் முற்றுகையிட்டனர். தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததால் தொகுதியை அல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிரப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வெளியேறினார்கள்.
தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாரணாசி தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 41 தொகுதிகளுக்கும் இன்றிரவு முதல் நாளை முழுவதும் பூத் சிலிப் கொடுக்கும் பணி நடைபெறும். 12-ந்தேதி காலை 7 மணி முதல் 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 6மணிக்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல்வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் 9 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் மே 16ம்தேதி அறிவிக்கப்படும். அன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மதியத்துக்குள் பெரும்பாலான தொகுதிகளுக்கான வெற்றி நிலவரம் தெரியவரும்.
முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 7ம்தேதி நடைபெற்றது. அசாமிலுள்ள 5 தொகுதிகள் மற்றும் திரிபுராவின் ஒரு தொகுதி என அன்று மொத்தம் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
ஏப்ரல் 9ம்தேதி நடந்த 2ம்கட்ட தேர்தலில், 6 தொகுதிகள், ஏப்ரல் 10ம்தேதி நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில், 91 தொகுதிகள், 12ம்தேதி நடந்த 4ம் கட்ட தேர்தலில் 121 தொகுதிகள், ஏப்ரல் 24ம்தேதி நடைபெற்ற 6ம் கட்ட தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி உட்பட 117 தொகுதிகள், ஏப்ரல் 30ம்தேதி நடைபெற்ற 7ம் கட்ட வாக்குப்பதிவில் 89 தொகுதிகள், மே 7ம்தேதி நடைபெற்ற 8ம் கட்ட வாக்குப்பதிவில் 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.