ஊழல் வழக்கு... கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலாளர் கைது... சிபிஐ அதிரடி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளரை இன்று சிபிஐ போலீசார் ஊழல் வழக்கில் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளராக ராஜேந்திர குமார் பதவி வகித்து வருகிறார்.
கடந்தாண்டு இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிபிஐ அவரது அலுவலத்தில் அதிரடிச் சோதனை நடத்தியது. அப்போது இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக 4 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இன்று ராஜேந்திரகுமார் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ராஜேந்திரகுமார்?
கெஜ்ரிவாலின் நம்பிக்கையைப் பெற்ற அதிகாரிகளுள் ராஜேந்திரகுமாரும் ஒருவர். ஆம் ஆத்மி முதன் முறையாக டெல்லியில் 49 நாட்கள் ஆட்சியில் இருந்த போது, அரவிந்த் கெஜ்ரிவாலால் முதன் முதலாக நியமிக்கப்பட்ட அதிகாரி இவர் தான். அரவிந்த் கெஜ்ரிவாலும் ஐ.ஐ.டி காரக்பூரில் படித்தவர், ராஜேந்திர குமாரும் ஐ.ஐ.டி காரக்பூரில் படித்தவர் என்பதால், இருவருக்கும் நெருக்கம் அதிகம்.இதனால் 2வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவிக்கு வந்த பின்னரும் இவர்தான் முதன்மை செயலாளராக பணியாற்றினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ராஜேந்திர குமார் டெல்லி அரசில் பல்வேறு பணிகளில் இருந்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை, சுகாதாரத்துறை , மின்சாரத்துறை ராஜேந்திரகுமாரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
இந்த சூழ்நிலையில்தான் டெல்லி லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஆஷிஸ் ஜோசி என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், ராஜேந்திரகுமார் ஐ.டி செயலாளராக போக்குவரத்து துறை மேலாண் இயக்குநராக வாட் கமிஷனராக இருந்த போது பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் 50 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்துதான் சி.பி.ஐ அதிரடி சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.