கர்நாடக அமைச்சர் ஆபாச படம் பார்த்தாரா, இல்லையா? செல்போனை நோண்டப்போகிறது சிஐடி
பெங்களூர்: அமைச்சர் ஆபாச படம் பார்த்த சர்ச்சை குறித்து சிஐடி பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மைசூர் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை கர்நாடகத்தில் அமைந்துள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த வருடம் முதல் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.
திப்பு பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது பாஜக. எதிர்ப்பை மீறி கடந்த 10ம் தேதி மாநிலம் முழுக்க பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ரெய்ச்சூர் நகரில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், துவக்க கல்வி அமைச்சர் தன்வீர் சேட், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா மேடையில் இருந்தவாரே, அவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி டிவி சேனல் வீடியோகிராபரால் படம் பிடிக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது.
இதனால் மாநில அரசியலில் சர்ச்சை வெடித்துள்ளது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மற்றும் முதல்வர் சித்தராமையா, இதுதொடர்பாக அமைச்சர் தன்வீர் சேட்டிடம் விளக்கம் கேட்டுள்ளனர். முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து தன்வீர் சேட், நேற்று, விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, தன்வீர் சேட் பிரச்சினை குறித்து மேலிடம் கேட்டறிந்துள்ளது. தன்வீர் சேட் என்னிடம் அளித்த விளக்கம் திருப்திகரமாகவே இருந்தது. இருப்பினும், சிஐடி போலீஸ் பிரிவின், சைபர் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். செல்போனில் தன்வீர் சேட் என்ன பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை அவர்கள் கண்டறிந்து சொல்வார்கள். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.