எட்டரை மணிக்கு எழுந்துவரும் சூரியன்... குளிரில் நடுங்கும் பெங்களூரு!
பெங்களூரு: எட்டரை மணிக்கு எழுந்துவரும் சூரியனால், குளிரின் பிடியில் சிக்கி நடுங்கிக் கொண்டுள்ளனர் பெங்களூருவாசிகள்.
இதமான தட்பவெப்பத்திற்கு பெயர் பெற்றது பெங்களூரு. மார்ச் முதல் மே மாதம்வரையில்தான் இங்கு வெயில் காலம் இருக்கும். கோடையும் மிக கடுமையாக இருக்காது. அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும்.
ஜூன் முதல் அக்டோபர் வரை அவ்வப்போது மழை பெய்தபடி இருக்கும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் வாட்டும். அதிலும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி பாதிவரையில் குளிர் மிக கடுமையாக இருக்கும்.
இது புத்தாண்டு குளிர்
ஆனால் இந்த ஆண்டு குளிர் சீசனில் டிசம்பர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஜனவரி பிறந்தது முதலே குளிரின் தாக்கம் அதிகரித்துவிட்டதாக நடுங்கியபடியே கூறுகின்றனர் பெங்களூருவாசிகள்.
குறைந்தபட்ச வெப்பம் குறைஞ்சே போச்சு..
அதிலும், கடந்த ஒரு வாரமாக நிலைமை மிக மோசமாக உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியசை ஒட்டியே உள்ளதால் வாயில் இருந்து புகை வரும் நிலையில் (பொறாமையால் வரும் புகையல்ல) உள்ளனர் இந்தியாவின் ஐடி தலைநகரவாசிகள்.
கருணை காண்பிப்பாரா சூரிய பகவான்?
பகலவனை கண்டால் பனி விலகிவிடும் என்ற எதிர்பார்ப்பில் வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் பெங்களூர்வாசிகளுக்கு சூரிய பகவானின் தரிசனம் காலை 8.30 மணிக்கு மேல்தான் கிடைக்கிறது. ஏன் லேட்டா வந்தீங்க... என அவரிடம் சண்டையா போட முடியும். எனவே, நாளைக்காவது கொஞ்சம் சீக்கிரம் வாருங்கள் சூரியரே... என்ற வேண்டுகோளுடன் நாளை கடத்துகின்றனர் நகரவாசிகள்.
தை பிறந்தால் வழி பிறக்குமாம்
பொதுவாக, பொங்கலுக்கு பிறகு சூரியனாரின் கருணை பெங்களூர்வாசிகளுக்கு கிடைக்கும் என்பது இங்கு பல ஆண்டுகாலமாக வசிப்போரின் அனுபவ வாக்கு. அந்த நம்பிக்கையை உறுதியாக்கும் வகையில், நாளை முதல், குறைந்த பட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும் என்று கூறுகிறது பெங்களூரு வானிலை இலாகா. வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்ப நிலை 16 டிகிரி செல்சியசாகவும், வெள்ளிக்கிழமை, 18 டிகிரி செல்சியசாகவும் உயரும் என்று கதகதப்பு தகவல் கதைக்கிறார்கள், வெதர்மேன்கள்.
வெப்பம் கூடும்
கடந்த சில நாட்களாக பெங்களூரின் குறைந்தபட்ச வெப்ப நிலை 15 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியை ஒட்டியுமே இருந்துவருகிறது. அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகவும் அதிகரிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
கொஞ்சும் பொறுத்துக்கொள்ளுங்கள்
எனவே பெங்களூர்வாசிகளே பல்லைகடித்துக் கொண்டு இன்னும் ஓரிரு நாட்கள் குளிரை பொறுத்துக்கொள்ளுங்கள். தை வந்தால் டாப்பா வருவீங்க அப்படீன்னு அதிகாரிகள் சொல்லிப்புட்டாங்கோ..