நாட்டை விட்டு ஓடிய ரூ.9000 கோடி கடனாளி விஜய் மல்லையா: நாடாளுமன்றத்தில் அனல்
டெல்லி: வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டு விஜய் மல்லையா வெளிநாடு தப்பி செல்வதற்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சராமரியாக குற்றம்சாட்டியுள்ளன.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கிங்க்பிஷர் விமானத்தை இயக்குவதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், மல்லையாவையும், அவரது கிங்பிஷர் நிறுவனத்தையும் கடனை திருப்பிச் செலுத்த தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின்கீழ் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை அறிவித்தன. இது தொடர்பாக மல்லையா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே, அவர் வெளிநாடு செல்ல தடை கோரி 13 பொதுத்துறை வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகி பதில் அளித்த அரசு வழக்கறிஞர் சிபிஐ தகவலின்படி விஜய் மல்லையா ஏற்கனவே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறினார்.
இதையடுத்து, இந்த மனு மீது 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இந்தியாவில் இல்லாதபட்சத்தில், நோட்டீஸை மல்லையாவின் மாநிலங்களவை உறுப்பினருக்கான இ மெயில் முகவரியிலும், லண்டனில் உள்ள இந்திய தூதர் மூலமாகவும் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலையில் பல்வேறு வங்கிகள் மீண்டும் அவருக்கு ஏன் கடன் வழங்கியது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மல்லையா வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன்தொகையை விட அதிகமாக வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும், கடந்த 2ம் தேதியே விஜய் மல்லையா வெளிநாடு சென்றுவிட்டார் என்றும் விசாரணையின் போது அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
குலாம் நபி ஆசாத்
விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று சூட்டை கிளப்பியது.
ராஜ்யசபாவில் மல்லையா விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி பேசினார். சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள நிலையில் மல்லையா இந்தியாவைவிட்டு தப்பியது எப்படி என்று அப்போது அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மல்லையா தப்பிச் செல்ல அரசே உதவி செய்து உள்ளதாகவும் குலாம்நபி ஆசாத் குற்றம் சாட்டினார்.
கைது செய்யாதது ஏன்?
மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்காதது ஏன் எனவும் அவரை கைது செய்யாமல் விட்டது ஏன் எனவும் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே தப்பிச் சென்ற லலித் மோடியை மத்திய அரசால் கொண்டுவர முடியவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
மல்லிகார்ஜூன கார்கே
லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே, வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி அளவுக்கு மல்லையா கடன் வாங்கிவிட்டு கட்டவில்லை. மார்ச் 2ம் தேதி மல்லையா இந்தியாவை விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறினார்.
பாஸ்போர்ட் முடக்கம்
ஸ்டேட் வங்கி வழக்கறிஞர் மல்லையா மீது வழக்கு தொடர அறிவுறுத்தி உள்ளார். வக்கீலின் அறிவுரையை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் புறக்கணித்து உள்ளனர். மல்லையாவை வெளிநாடு தப்பிச் சென்றதும் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார். மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்காதது ஏன்? எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேட்டார்.
வெளிநடப்பு
இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். விஜய் மல்லையா வெளிநாடு தப்பி சென்றதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியா காந்தி தலைமையில் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல ராஜ்யசபாவிலும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் வெளிநாடப்பு செய்தனர்.
அருண் ஜெட்லி பதில்
விஜய் மல்லையா விவகாரத்தில் வங்கிகள் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் என்று லோக்சபாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களிடம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்தார். தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து கடன் பாக்கியை வங்கிகள் திரும்பப் பெறும் என்றும் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த அருண் ஜேட்லி கூறினார்.
ரூ. 9,091 கோடி கடன்
கடந்த நவம்பர் வரை விஜய் மல்லையா ரூ.9 ஆயிரத்து 91கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். மல்லையாவிடம் இருந்து கடனைத் திரும்பப் பெற வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி புகார்
இதனிடையே லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்த ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், 9 ஆயிரம் கோடி பணத்தை திருடிக்கொண்டு நாட்டை விட்டே ஓடிவிட்டார் விஜய் மல்லையா. இது குறித்து நாடாளுமன்றத்தில் சரியான பதிலளிக்க பிரதமர் மோடியோ, நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ தயாராக இல்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அனல்
மல்லையா போன்றவர்களை பாதுகாக்கவே மத்திய அரசின் திட்டங்கள் இருப்பதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, கருப்பு பணத்தை மீட்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். விஜய் மல்லைய விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனலை கிளப்பிய நிலையில் இதற்கு ஆளும் பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.