இனி சரக்கடித்துவிட்டு வண்டி ஓட்டினால் ரூ 10 ஆயிரம் அபராதம்!
டெல்லி: இனி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதா தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்த சில யோசனைகளும் மசோதாவில் சேர்க்கப்பட்டன.
இந்த திருத்த மசோதா, மோட்டார் வாகன விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதம் விதிக்க வகை செய்கிறது.
அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாகவும், ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அவசர ஊர்திகளுக்கு (ஆம்புலன்ஸ் வாகனங்கள்) வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய அம்சமும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
காப்பீட்டு நிறுவனம், வாகன விபத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நிபந்தனைகள் தொடர்பான திருத்தம் உள்பட பல திருத்தங்கனை உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். அந்த திருத்தங்களும் நிராகரிப்பட்டன. இது தொடர்பாக உறுப்பினர்கள் தெரிவித்த யோசனைகள் பின்னர் பரிசீலிக்கப்படும் என்று மந்திரி கட்காரி கூறினார்.
அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.