திருப்பதி கோவிலில் துபாய் பக்தரிடம் ரூ.18 லட்சம் ரொக்கம் திருடிய வாலிபர் கைது
துபாயில் வசிப்பவர் பிரசாந்த் சக்சேனா. அவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் ஏழுமலையான தரிசிக்க திருப்பதி வந்தார். நேற்று ரூ.300 சிறப்பு கட்டண வரிசையில் சாமியை தரிசிக்க காத்துக் கொண்டிருந்தார். சாமிக்கு காணிக்கை செலுத்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள துபாய் கரன்சி நோட்டுகளை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார்.
கோவில் அருகே உள்ள பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியபோது அவர் வைத்திருந்த பணம் மற்றும் நகையை யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள். இதையடுத்து அவர் கண்காணிப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். உடனே கோவில் கண்காணிப்பு கேமரா மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டனர். மேலும் பக்தர்களிடம் நடத்தப்படும் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது தரிசன வரிசையில் வந்த ஒரு வாலிபரிடம் போலீசார் சோதனையிட்டனர். அவரிடம் சக்சேனாவின் பணமும், நகையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை விசாரித்தபோது பணம் மற்றும் நகையைத் திருடியதை ஒப்புக் கொண்டார்.
அந்த வாலிபர் சக்சேனாவிடம் பணம் இருப்பதை பார்த்துவிட்டு வரிசையில் அவருக்கு பின்னால் வந்து நின்றுள்ளார். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு வரிசையின் பின்புறமாக வந்து நின்றுவிட்டார். அந்த நபரின் பெயர் அஸ்வந்த்(21) என்பதும், அவர் இந்துபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அந்த நபரை கண்காணிப்பு அதிகாரிகள் கைது செய்து திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதே போன்று பிரமோற்சவத்தின்போது பக்தர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய சென்னையைச் சேர்ந்த நதியா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரை திருமலை போலீசார் நேற்று கைது செய்தனர்.